சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்
சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அனுமதிபெற்ற பின்னர் தான் புதிதாக கட்டிடம் கட்டப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் கட்டிடம் கட்டுபவர்களுக்கு துணையாக மின்வாரியம், மின்சார இணைப்பை கொடுத்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண மக்கள் கட்டுகின்ற வீடுகளுக்கு மின் இணைப்பு தரவேண்டும் என்று கேட்டால், பல காரணங்களை சொல்லி மின் இணைப்பை தரமறுக்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களுக்கு, மின் இணைப்புக்கு முறையான ஆவணம் செலுத்தாமல், இலஞ்சம் பெற்றுகொண்டு மின் இணைப்பு வழங்கப்படுவதாக அங்குள்ள மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
வாகனங்கள் சென்றுவர சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்வது போக்குவரத்திற்கு இடையூராக இருக்கிறது. தமிழக அரசும், மாநகராட்சியும் இதில் தலையிட்டு சாலையோரங்களில் உள்ள முறையற்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவேண்டும். இதேபோல் விதியை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.