எண்ணெய்யை வாளியில் அள்ள கடல் என்ன கிணறா.. கொதித்தெழுந்த விஜயகாந்த்
இரண்டு கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டிய எண்ணூர் பகுதியை விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.
சென்னை: கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கொட்டியதால் எண்ணூர் முதல் நீலாங்கரை வரை கடலோரப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெயால் பாதிக்கப்பட்ட எண்ணூர் கடலோரப் பகுதிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் பார்வையிட்டார்.
கடந்த 27ம் தேதி எண்ணூர் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் நிரப்பிய கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதியது. இதனால் கப்பலுக்கு பாதிப்பு ஏற்பட்டு அதில் கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் கடலில் இருந்து நீலாங்கரை வரை பரவி வருகிறது.
பரவிய கச்சா எண்ணெய்யை வாளியால் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வாரமாக எண்ணெய் அகற்றும் பணி செய்தும் இன்னும் முடிந்தபாடில்லை. இதனால் மீன்கள், ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.
விஜயகாந்த் ஆய்வு
பாதிப்பிற்குள்ளான இந்த எண்ணூர் பகுதியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பிரேமலதாவும் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மீனவர்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.
பணி மந்தம்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடலில் எண்ணெய் அகற்றும் பணி மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. ஆயிரம் பேர் டீசல் அகற்றும் வேலையை பார்த்தாலும் பணி மந்தமாகவே நடைபெற்று வருகிறது. புதிய நவீன கருவிகளை வாங்கி எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
கடல் என்ன கிணறா?
எண்ணெய் கழிவுகள் வாளிகளில் அகற்றப்படுகிறது. வாளிகளில் அகற்ற கடல் என்ன கிணறா? வாளியில் அள்ளிக் கொட்டினால் என்றைக்கு இந்தப் பணிகள் முடியும்? குப்பமானாலும், எண்ணூரானாலும், ராமேஸ்வரமானாலும் மீனவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
|
லஞ்சம் வாங்குவதில் அக்கறை
லஞ்சம் வாங்குவதில் அக்கறை காட்டுவோர், புதிய கருவிகள் வாங்குவதில் அக்கறை காட்ட வேண்டும். கடலில் எண்ணெய் கலந்துள்ளதால் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து போய்விட்டன. எண்ணெய் அகற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.