மக்களை காக்க வேண்டிய போலீசார் மதுக்கடைக்கு காவல் இருப்பது வெட்கக்கேடு: விஜயகாந்த்
சென்னை: மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு பாதுகாவல் செய்வது வெட்கக்கேடானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டித்துள்ளார்.
விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், அதிமுக அரசின் காவல்துறை நேற்று இரவோடு இரவாக கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயக ரீதியில் அகிம்சை வழியில் நடைபெறும் போராட்டங்களில் இதுபோன்ற அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கைது செய்வதில்லை. போராட்டத்தில் ஈடுபடும்போது கைது செய்யப்படுவதே ஜனநாயக நெறியாகும். ஆனால் போராட்டத்திற்கு முன்பே தேமுதிகவினர் மீதுள்ள அச்சம் காரணமாக அரசு அவர்களை கைது செய்துள்ளது. முழு அடைப்பு வெற்றி பெறக்கூடாது என்பதே நோக்கம்.
அப்படி அரசுக்கு பயமில்லை என்றால், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக வெளியேவிட வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் தேமுதிக ஒருபோதும் அஞ்சாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது போன்ற வெட்கக்கேடான விஷயம் வேறெதுவுமில்லை.
மதுவால் ஏற்படும் குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் கோர்ட்டுக்கு பொய் தகவலை அரசு அளித்து வருகிறது. எனவே, நீதிமன்றத்தையே ஏமாற்றும் போக்கில் செயல்படுகிறது இந்த அரசு. மேன்மைதாங்கிய ஹைகோர்ட் நீதியரசர்கள், தமிழகத்தில் மதுவிலக்கிற்காக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும், ஊடகங்களில் பார்த்திருப்பார்கள்.
எனவே, தமிழகத்தில் தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன்வந்து (சுமுட்டோ) நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.