தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்தான்... அடித்துச் சொல்லும் பிரேமலதா
கரூர்: 2016 சட்டசபைத் தேர்தலை எத்தனை பேர் சந்தித்தாலும் விஜயகாந்த் தான் அடுத்த முதல்வர் என்று தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா உறுதியாக கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட 'மக்களுக்காக நான்' என்ற நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா வழங்கினர். கூட்டத்தில் பிரேமலதாவின் பேச்சுதான் செம ஹைலைட் என்கின்றனர்.
பினாமி மது ஆலைகள்
தி.மு.க. ஆட்சியில் போட்ட திட்டங்களை அ.தி.மு.க. முடக்குகிறது. அதேபோல், அ.தி.மு.க. போடும் திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முடக்குகிறது. ஆனால், தி.மு.க.வால் கொண்டு வரப்பட்ட மதுக்கடையை மட்டும் இரு அரசுகளும் முடக்குவதில்லை. காரணம், தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மது ஆலைகள் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பினாமிகள் பெயரில்தான் நடத்தப்படுகிறது.
தேமுதிகவிற்கு போட்டி
நாங்கள், மக்களுக்காக நான் என்ற திட்டத்தை தொடங்கியவுடன், தி.மு.க.வில் தமக்குத்தாமே என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அ.தி.மு.க.வினர் இப்போதே 64,000 பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழக முதல்வர்
அனைவரும் 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டனர். எத்தனை பேர் தேர்தலை சந்தித்தாலும், விஜயகாந்த் தான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார் என்று கூறியுள்ளார் பிரேமலதா.
அப்போ கூட்டணி கிடையாது
கடந்த ஒரு வார காலமாகவே பிரேமலதாவின் பேச்சை கவனித்தால், திமுக கூட்டணி உறுதியாக இல்லை என்றே உறுதியாகத் தெரியவந்துள்ளது. ஆனாலும் தேமுதிகவை இணைத்துக்கொண்டால் அதிமுகவை வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கிறது அதற்குள் அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் வருமோ? காத்திருக்கலாம்.