கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும், வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்: விஜயகாந்த் ஓணம் வாழ்த்து
சென்னை: கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று, எல்லா வளமும் பெற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
திராவிட நாட்டின் அங்கமான கேரள மக்கள் திருவோணத்தையொட்டி அத்திப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடும் பாரம்பரியமிக்க பண்டிகை ஓணம் பண்டிகையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் இதை "அறுவடை திருநாள்" என்றும் சொல்வார்கள். இந்த பண்டிகையை சமுதாயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன்,
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற பேதமின்றி, அனைவரும் ஒன்று கூடி முக்கிய திருவிழாவாக நாளை (28.08.2015) கொண்டாடுகின்றனர்.
மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியிலே சண்டை, சச்சரவு, துன்பம் ஏதுமின்றி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகவும், அந்த மன்னன் வரம்பெற்று திருவோணத்தன்று
நாட்டுமக்களை சந்திக்க வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நன்நாளையே ஓணம் பண்டிகை என்றழைத்து கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இனிய நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று, எல்லா வளமும் பெற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஓணம்
திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.