ரயில்வே பட்ஜெட் கானல் நீர் என்கிறார் வைகோ; விஜயகாந்த் வரவேற்பு
சென்னை: கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துள்ள நிலையில், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தைக் குறைப்பதற்கு இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முயற்சிக்கவில்லை என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு, இந்த ரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
2014 இல் பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற உடனேயே பயணிகள் கட்டணம் 14.2 விழுக்காடு, சரக்குக் கட்டணம் 6.5 விழுக்காடு உயர்த்தப்பட்டது. இரயில்வே துறையின் வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் 8.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் தேவை என்றும், தனியார்-அரசு பங்கேற்புடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துவிட்டு, ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று கூறுவது முரணாக இருக்கிறது.
ரயில்வே துறையின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அந்நிய நேரடி முதலீடுகளும் பெறப்படும் என்று அறிவித்து இருப்பதால், உண்மையில் ரயில்வே துறை தனியார் மயம் நோக்கிப் போய்க்கொண்டு இருப்பது தெளிவாகிறது.
தனியார் மயம்
பிரதமர் மோடி அறிவித்துள்ள ‘தூய்மை இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம்' ஆகிய திட்டங்களுக்கு இரயில்வே முன்னுரிமை கொடுக்கும் என்று இரயில்வே அமைச்சர் கூறுகிறார். ஆனால், இத்திட்டங்களை முழுக்கமுழுக்கத் தனியார்துறையின் பங்கேற்பில் மட்டுமே நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வந்த மோடி அரசு, அதே நோக்கத்திற்காக ரயில்வே துறையின் நிலங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆபத்து உருவாகி இருக்கின்றது.
தமிழக திட்டங்கள்
தமிழ்நாட்டின் இன்றியமையாத தேவைகளான இராயபுரத்தில் புதிய முனையம் அமைப்பது, சென்னை-கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை, அகலப்பாதைத் திட்டங்கள், ஆய்வு செய்யப்பட்ட புதிய வழித்தடங்கள் அமைத்தல், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் புதிய இரயில் சேவை, மற்றும் புறநகர் இரயில்சேவை விரிவாக்கம் போன்றவை குறித்து இந்த இரயில்வே பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
கையேந்த வேண்டுமா?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் பற்றி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று இரயில்வே அமைச்சர் குறிப்பிட்டு இருப்பது, இதுவரையில் இல்லாத நடைமுறை ஆகும்.
இரயில்வே திட்டங்களுக்காக மாநிலங்கள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து கையேந்த வேண்டிய நிலைமையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.
ஓய்வூதிய நிதி
இரயில்வே துறை மேம்பாட்டுக்காக வங்கிக் கடனுடன், லட்சக்கணக்கான ஊழியர்களின் ஓய்வூதிய நிதியைத் திருப்பி விடுவது ஏற்கத்தக்கது அல்ல.
இரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துதல், பயணிகள் குறை தீர்க்க இலவச தொடர்பு எண்கள் அறிவிப்பு, இணைய வழி சேவைகள் அறிவிப்பு போன்றவற்றை வரவேற்கலாம்.
நடைமுறைக்கு வராத திட்டங்கள்
ரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தல், இரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல், பசுமைக் கழிவறைகள் ஏற்படுத்துதல், பெண் பயணிகள் பாதுகாப்பு, முக்கிய இரயில் நிலையங்களில் வைஃபை வசதி, குறைந்த விலையில் தரமான குடிநீர் விற்பனை போன்றவை அனைத்தும் கடந்த இரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட், காகித அறிவிப்பாகவும், கானல் நீராகவும் காட்சி அளிக்கின்றது என்று வைகோ கூறியுள்ளார்.
விஜயகாந்த் வரவேற்பு
'மத்திய அரசின் 2015-2016 நிதி ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டது என்பதும், ஏழை எளிய மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதும், பெண்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கும், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்பதும், முன்பதிவு கால அவகாசத்தை 120 நாட்களாக நீடித்ததும், பயணிகளின் வசதிக்காக 67 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கியதும், ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பில் நவீன மாற்றங்கள் செய்வதும் வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கைவிடப்பட்ட திட்டங்கள்
நாடு முழுவதும் 96 ஆயிரம் கோடி மதிப்பில் 77 திட்டங்கள் விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, சர்வே முடிந்த நிலையில் சென்னை-ஸ்ரீபெரும்பதூர், மதுரை-கோட்டயம் உள்ளிட்ட சுமார் 24 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும், பணி நடந்து வரும் நிலையில் சென்னை-கடலூர், பழனி-ஈரோடு உள்ளிட்ட சுமார் 9 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வருகின்றன. இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இரட்டை ரயில்பாதை
மேலும், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சென்னை-கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை திட்டம் உள்ளிட்ட பல ரயில் பாதை திட்டங்களுக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், இதுவரையிலும் அத் திட்டங்களுக்காக சுமார் 700 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யானை பசிக்கு சோளப்பொரி
கடந்த காலங்களில் மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி "யானைப்பசிக்கு சோளப் பொரியாகத்தான்" இருந்துள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட நிலுவையில் உள்ள தமிழகத்தின் அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும், போதுமான நிதியை ஒதுக்கி இவற்றை நிறைவேற்ற உதவுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.