ஏரி நிரம்பியதை கடா வெட்டி... பொங்கலிட்டு கொண்டாடிய கிராம மக்கள் !
திருவண்ணாமலை: 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏரி நிரம்பியதை திருவண்ணாமலை அருகே கடா வெட்டி, பொங்கலிட்டு கிராம மக்கள் கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ளது பூசிமலைக்குப்பம். உயர்ந்த மலைகள், சீறி பாய்ந்தோடும் ஏரி நீர் என கண் சிமிட்டாமல் ரம்மியமாக காட்சியளிக்கிறது பூசிமலைக்குப்பம் ஏரி. அண்மையில் பெய்த கனமழைக்கு இங்குள்ள ஏரியில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், மேளதாளத்துடன் சீர்வரிசை பொருள்களை எடுத்துக்கொண்டு ஏரிக்கரையோரத்திலுள்ள செல்வாழியம்மனை வழிபட்டனர். கடா வெட்டி பொங்கலிட்ட கிராம மக்கள், ஏரியை வணங்கி வரவேற்றனர்.
பட்டுப்புடவை, தங்கத்தாலி, பூ, மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருள்களை தண்ணீரில் விட்டு தங்களது நன்றிக்கடனை செலுத்தினர். ஆண்டுதோறும் ஏரி நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக வழிபாடு மேற்கொண்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஏரிக்கு நன்றி செலுத்தும் விதமாக நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்துடன் உணவு பரிமாறப்பட்டது.
இயற்கை சீற்றத்தால் பெய்த கனமழையால் ஒரு புறம் வெள்ளம் சூழ்ந்து மக்களை படாத பாடு படித்தினாலும் மற்றொரு புறம் விவசாயம் செழிக்க நீர் நிலைகளையும் நிரப்பிதான் செல்கிறது. இயற்கை சீற்றத்தை எதிர்கொள்வதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் நம் கையில்தான் உள்ளது.