சூழல் மாசுக்கு எதிராக கை கோர்த்த கிராம மக்கள்.. மூடப்பட்டது அரசு சிமெண்ட் ஆலை!
கரூர்: கரூர் அருகே தமிழ்நாடு காகித ஆலையின் சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் இரசாயணம் கலந்த சுண்ணாம்பு துகள்களால் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து சிமெண்ட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது
கரூரை அடுத்த புகளூரில் செயல்படும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிமெண்ட் உற்பத்தி ஆலை கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. ஆலை துவங்கிய நாள் முதலே சிமெண்ட் ஆலையிலிருந்து இரசாயணம் கலந்த சுண்ணாம்பு துகள்கள் வெளியேறுவதால் சுற்று வட்டார 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், ஆஸ்துமா, தோல் தொடர்பான பல்வேறு நோய்கள் தாக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆலை நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிமெண்ட் ஆலையை இரவு முற்றுகையிட்டனர். அப்போது இராசயண சுண்ணாம்பு வெளியே செல்லாதவாறு ஆலையின் சுற்றுச்சுவரை உயர்த்தி அமைத்து கொள்வதாக ஆலை நிர்வாகம் உறுதியளித்தது.
ஆனால் இன்று வரை ஆலை நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும், தொடர்ந்து சுண்ணாம்பு துகள்கள் முன்பை காட்டிலும் அதிகமாக வெளியேறியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காகித ஆலையின் நான்கு வாயில்களையும் திடீரென முற்றுகையிட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும் போது, பாதிக்கப்பட்ட நாங்கள் திடீரென ஆலையை முற்றுகையிட்டதால் ஆலை நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எங்களை சமாதானப்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளனர். எங்களது பிரச்சினைகளை தீர்க்க ஆலை நிர்வாகம் முன் வரவில்லை என்றனர்.
இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 10 நாட்கள் சிமெண்ட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு மீண்டும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் ஆலையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்த பிறகே ஆலை இயக்கப்படும் என்று கரூர் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன் உறுதியளித்ததன் பேரில் 4 மணி நேரம் போராட்டத்தின் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.