கதிராமங்கலத்தில் 9வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்.. எப்போதுதான் கண்டுக்கும் இந்த அரசு?
கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரி 9வது நாளாக கதிராமங்கலம் கிராமத்தில் போராட்டம் நடைபெற்றுகிறது.
தஞ்சாவூர்: கதிராமங்கலம் மக்களுக்காக போராடிய பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அய்யனார் கோயில் திடலில் 9வது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் 30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றி 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யனார் கோயிலில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9வது நாளாக போராட்டம்
அய்யானர் கோயில் அருகில் கடந்த 11ம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது. கோயில் அருகில் கிராம மக்கள் கூடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொய் வழக்கு
ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். பத்து பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை போலீசார் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் உறுதியாக போராடி வருகின்றனர்.
அதிகரிக்கும் ஆதரவு
கதிராமங்கலம் போராட்டத்திற்கு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்ன செய்கிறது அரசு?
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள், விவசாயம் அழிந்துவிடாமல் மண்ணை காப்பாற்றுவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்று குற்றம்சாட்டி வருகின்றனர் அப்பகுதி மக்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு போல் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று மக்கள் குமுறுகிறது.