ஜெ.வுக்காக... குலவை இட்டபடி சாமியாடிய பெண் மயங்கி விழுந்து மரணம்!
விருதுநகர்: விருதுநகர் அருகே ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வழிபாட்டில் பெண் ஒருவர் சாமியாடியபடி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப அதிமுகவினர் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்திலும் பல கோவில்களில் ஹோமம், யாகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், முருகன் காலனியைச் சேர்ந்த பொன்னுத்தாய் என்ற பெண்ணும் கலந்து கொண்டார்.
அப்போது கோவில் வளாகத்தில் திடீரென சாமி வந்து ஆடிய பொன்னுத்தாய், குலவை போட்டபடியே திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு பொன்னுத்தாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.