அப்துல் கலாம் நினைவிடத்தில் போட்டோ எடுக்க தடை.. பார்வையாளர்கள் ஏமாற்றம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலுள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்பவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடம், பாதுகாப்புத்துறை சார்பில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் அப்துல் கலாம் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகே பகவத்கீதை புத்தக சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது.
கலாம் அருகே கீதை புத்தகம் இருப்பது தமிழகத்தில் பல்வேறு மட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கலாமின் உறவினர்கள், கலாம் சிலை அருகே குர்ஆன் மற்றும் பைபிள் ஆகிய இஸ்லாமிய, கிறிஸ்தவ புனித நூல்களை வைத்துச் சென்றனர். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கலாம் நினைவிடத்திற்கு செல்லும் மக்கள் புகைப்படம் எடுக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் வெளியே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிலை அருகே புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறுகையில், மத்திய பாதுகாப்புத்துறையின் டிஆர்டிஓ கட்டுப்பாட்டில்தான் கலாம் நினைவகம் உள்ளது. போட்டோ எடுக்க விதிக்கப்பட்ட தடை குறித்து டிஆர்டிஓ இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை என்றார்.