புதுச்சேரி மாஜி அமைச்சர் விஎம்சி சிவகுமார் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் நீதிமன்றத்தில் சரண்
புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவகுமார், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த எழிலரசி திங்கள்கிழமை காலை புதுவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
புதுவை: முன்னாள் திமுக அமைச்சர் சிவக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த எழிலரசி இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
புதுச்சேரியில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் சிவகுமார். புதுவை சட்டசபை சபாநாயகராகவும் சிவகுமார் பணியாற்றினார். கடந்த ஆண்டு ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த சிவகுமார் ஆதரவு தந்தார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து சிவகுமார் அதிமுகவில் இணைந்தார்.
இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி காரைக்கால் நீராவி என்ற இடத்தில் சிவக்குமார் கட்டி வரும் திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளை பார்க்கச் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் சிவகுமார் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்தது.
இந்த சம்பவம் குறித்து நீராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, முன்விரோதம் காரணமாக காரைக்காலை செய்த பிரபல சாராய வியாபாரி ராமுவின் 2-வது மனைவி எழிலரசி, தமிழகத்தை சேர்ந்த கூலிப்படையை வைத்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் தமிழகத்தில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி பகுதியை சேர்ந்த பிரபு, சூரிய பிரகாஷ், காரத்திக், சண்முகம் ஆகிய 4 பேர் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதற்கிடையே முக்கிய குற்றவாளியான எழிலரசி இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி தனலட்சுமி உத்தரவிட்டார். மேலும் எழிலரசியை காரைக்கால் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலாப்பட்டு மத்திய சிறையில் எழிலரசி அடைக்கப்பட்டார்.