வைகோ இல்லத்திருமணம்... கலிங்கபட்டியில் திரண்ட விவிஐபிக்கள்!
கலிங்கப்பட்டி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தம்பி வை.ரவிச்சந்திரனின் மூன்றாவது மகன் மகேந்திர வையாபுரி - பிரீதி திருமணம் இன்று காலையில், கலிங்கப்பட்டியில் உள்ள வையாபுரி மாரியம்மாள் அரங்கில் நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலையில் பூண்டி துளசி அய்யா வாண்டையார் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
வைகோவின் தம்பி வை. ரவிச்சந்திரனின் மூன்றாவது மகன் மகேந்திர வையாபுரிக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இரா. கிருஷ்ணசாமி கொள்ளுப்பேத்தியும், போஜராஜனுடைய மகளுமான போ. ப்ரீதி திருமணம் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கலிங்கப்பட்டியில் நடந்தது.
மணவிழாவில் அரசியல் கட்சித்தலைவர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், திரைப்பட நடிகர்கள் என நூற்றுக்கணக்கான விஐபிக்கள் பங்கேற்றனர்.
ராம்ஜெத்மலானி, யஷ்வந்த் சின்கா, பேராசிரியர் இராமசாமி, (பினாங்கு மாநிலத் துணை முதல்வர்), நடிகர் சிவகுமார் , ஏ.சி.முத்தையா, கருமுத்து கண்ணன் (மதுரை தியாகராயர் கல்லூரி), இரா. கண்ணன் ஆதித்தனார் (மாலை முரசு), வி.ஜி. சந்தோசம், ஜி.விஸ்வநாதன் (விஐடி வேலூர்), தமிழருவி மணியன் , பழநி ஜி. பெரியசாமி, முத்துராமலிங்கம் (வேலம்மாள் கல்விக்குழுமம்), தினமணி வைத்தியநாதன், சிதார் சுப்புராஜ், அலெக்சாண்டர் (முன்னாள் டிஜிபி), கண்ணப்பன் (உளவுத்துறை முன்னாள்ஐஜி), திருநெல்வேலி மாவட்டஆட்சியர் மு.கருணாகரன், தமிழ்நாடு உள்ளாட்சி குறைதீர் மன்ற நடுவர் சோ.அய்யர் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, காவல்துறை தென் மண்டல ஐஜி முருகன் மூத்த வழக்குரைஞர் மாசிலாமணி ஆகியோர் நேற்று மாலை வருகை தந்தனர்.
தொழில் அதிபர்கள், மருத்துவர்கள். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்பலர் வருகை தந்தனர். கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 11 கிராமத்து மக்களும் தங்களது குடும்ப விழாவாகக் கருதி பெருமளவில் திரண்டு வந்து சிறப்பித்தனர்.
வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும்வைகோ நன்றி தெரிவித்தார். எனது 52 வருட பொது வாழ்வில் நான் சம்பாதித்த விலை மதிப்பில்லாத ஒரே சொத்தாக கருதுவது சிறந்த நண்பர்கள் தான் என்று உணர்ச்சி பொங்க பேசி நன்றி கூறினார். வைகோ இல்ல திருமண விழாவிற்கு வந்த விவிஐபிக்களால் கலிங்கப்பட்டி நிரம்பி வழிந்தது.