செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் கிடுகிடு உயர்வு... சென்னைவாசிகள் வயிற்றில் பாலை வார்த்த மழை!
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் பிரச்சினையில் தத்தளித்து வந்த சென்னை கொஞ்சம் தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015-இல் சென்னையே வெள்ளத்தில் மூழ்கி குட்டித் தீவாக காட்சியளித்தது. அப்போது சாலைகளிலெல்லாம் மார்பளவு தண்ணீர் இருந்தது. நீர்நிலைகள் கரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தது. ஆனால் அந்த நீரை நாம் சேமித்து வைக்க தவறிவிட்டோம்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்துக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இதனால் விவசாய பயிர்கள் கருகின.
கடும் வறட்சி
இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டுவிட்டன. போதிய மழையில்லாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கியது
மக்கள் அவதி
இதையடுத்து மக்கள் காலிக்குடங்களுடன் வீட்டை விட்டு வீதிக்கு வந்தனர். மேலும் பலர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. மழையின் அளவு அதிகரித்ததால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரி ஆகியவை வறண்டதால் விரல் விட்டு எண்ணக்கூடிய நாள்களுக்கு மட்டுமே நீர் கிடைக்கும் என்று பொதுப்பணித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 113 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
152 கனஅடி நீர்
ஏரியின் நீர்மட்டம் 101 மில்லியன் கன அடியிலிருந்து 113 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொண்ட ஏரியில் 113 மில்லியன் கன அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 152 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.