காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை... உயருகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை கடந்த 1934-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 170 அடி ஆழம் உள்ள இந்த அணையில் 93.47 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
இந்த அணையின் மூலம் 16.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் திறந்துவிடவில்லை. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
நீர் மட்டம் உயர்வு
இதனால் காவிரியின் துணை ஆறுகளான தொப்பையாறு, பாலாறு ஆகிய நீர் நிலைகளில் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் 20 அடிக்கும் கீழே இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒரு அடி உயர்வு
நேற்றுமுன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,329 கனஅடி நீர்வரத்து இருந்தது. நேற்று வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்றுமுன்தினம் 20.85 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 21.85 அடியாக உயர்ந்தது.
வேகமாக உயருகிறது
அதாவது, நேற்று காலை அணை நீர்மட்டம் 21.86 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் மாலையில் அணை நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, 83 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதனால் அணையின் நீர் தேக்கி வைக்கும் திறன் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.