பாபநாசம் அணையில் நீர் அளவு கிடுகிடு சரிவு: கவலையில் விவசாயிகள்
நெல்லை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 22 அடியாக சரிந்ததால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு பயத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. கடைசி நேரத்திலாவது மழை பெய்யும் என்ற எண்ணத்தில் கார் பருவ சாகுபடி செய்திருந்தனர் விவசாயிகள்.
பாபநாசம் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 1ம் தேதி கார் பருவ சாகுபடிக்காக நீர் திறக்கப்படும் நிலையில் இந்தாண்டு தாமதமாக திறக்கப்பட்டதால் விவசாயிகள் பருவம் தவறி சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து கணிசமாக குறைந்துவிட்டது.
மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது. இதனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பாபநாசம் அணை மூடப்பட்டது. கார் பருவ நெல் சாகுபடியை பூர்த்தி செய்ய இன்னும் இரண்டு வார காலம் தண்ணீர் தேவைப்படும் நிலையில் அணை மூடப்பட்டதால் நெற் பயிர்கள் கருகி வருகின்றன.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 22 அடியாக சரிந்துவிட்டது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 46 அடி மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. பிற அணைகளிலும் நீர்மட்டம் இறங்கு முகமாகத் தான் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பருவநிலை மாறி காணப்படுகிறது. ஆடி மாதத்தை போல் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.