மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் மட்டம் குறைந்தது
நெல்லை: போதிய மழையில்லாததாலும், கடும் வெப்பத்தாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலமே நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் விவசாய தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டன. அக்டோபர் மாதம் நடக்கும் பருவ நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் குடிநீர் தேவைக்கு கூட அணையில் போதிய தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உள்ளது. இதனால் இந்த நீர் இருப்பை வைத்து எத்தனை நாட்கள் குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.