ஆடிப்பெருக்கை முன்னிட்டு... மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு ஜெ., உத்தரவு
சென்னை: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயம் செழிக்க வேண்டி காவேரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஆக.,2-ந் தேதி வருகின்ற ஆடிப்பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று காவேரி பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
தற்போது, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவேரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விடுவிக்கப்பட்டு வரும் 2000 கனஅடி நீருடன் கூடுதலாக 25.7.2016 முதல் 28.7.2016 வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறக்கப்படும்.
அதன்பிறகு 29.7.2016 முதல் 31.7.2016 வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.