ஓ.பி.எஸ் அமைத்துள்ள போர்வெல் கிணறுகளால் குடிநீர் பஞ்சம்... பொதுமக்கள் புகார்
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் கிணறுகளால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெரியகுளம் பகுதியில் மிகவும் ஆழமாக போர்வெல் அமைத்துள்ளார் என்றும் அதனால் அந்தப் பகுதியில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் அடுத்துள்ள லட்சுமிபுரத்தில் விவசாய நிலங்களை வாங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம், அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிவேக மின்மோட்டார்கள் பொறுத்தியுள்ளதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், 100 அடி ஆழம் மட்டுமே உள்ள கிராம சமுதாய கிணறுகளில் தண்ணீர் வற்றி, குடிநீருக்கே அலைய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல கிலோ மீட்டர் சுற்றி அலைந்தால்தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கிறது என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
இந்நிலையில், மேலும் ஒரு கிணறு தோண்டி பம்ப்செட் அமைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள், தேனி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போர்வெல் கிணறால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அரசு சரிசெய்யவில்லை என்றால் பெரிய அளவுக்குப் போராட்டங்கள் நடத்தவும் ஊர் மக்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஊர்கூட்டம் போட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் லட்சுமிபுரம் மக்கள்.