புதுச்சேரிக்கு 4 நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போக வந்திருக்கோம- தங்க தமிழ் செல்வன்
புதுச்சேரிக்கு 4 நாட்கள் ஓய்வெடுக்க வந்துள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
புதுச்சேரி: நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுத்து விட்டு செல்ல வந்துள்ளதாக டிடிவி தினகரன் எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர்ராவை இன்று காலை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக்கோரி கடிதம் அளித்தனர்.
இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கார்கள் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றுள்ளனர். முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மூலம் குதிரை பேரம் நடைபெறுவதை தவிர்க்கவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூவத்தூர் பாணியில், புதுச்சேரியில் உள்ள கடற்கரை கிராமமான சின்ன வீராம்பட்டினத்திலுள்ள விண்ட் ஃப்ளவர் என்ற கடற்கரையோர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தினகரன் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ரிசார்ட் மிக பிரமாண்டமானது. கூவத்தூரை விட பிரமாண்டமானதாக அத்தனை சொகுசு அம்சங்களுடன் இருக்கிறது இந்த ரிசார்ட். இதில்தான் 30 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளனவாம்.
இதனிடையே புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், நான்கு நாட்கள் புதுச்சேரியில் தங்கி ஓய்வெடுத்து விட்டு செல்ல வந்திருப்பதாக கூறினார்.
விடுதியில் தங்கி அனைவரும் ஒன்றாக இருக்க ஆசைப்பட்டோம் அதனால் வந்திருக்கிறோம். ஓய்வு தேவைப்பட்டதால் புதுச்சேரி வந்திருக்கிறோம். எங்களது கோரிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான். இப்போதய சூழ்நிலையில் எதையும் வெளிப்படையாக கூற முடியாது என்றும் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.