நாடா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார்- வதந்திகளை நம்பாதீர்கள்: அமைச்சர் உதயகுமார்
நாடா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாகவும், புயல் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நாடா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
புயல் அதிகம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கும் மாவட்டங்களில் முகாம்கள் தயாராக உள்ளதாகவும், அங்கு சமையல் கூடங்கள், உணவுப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். புயல் பாதுகாப்பு, கண்காணிப்பு மையங்கள் 24 மணிநேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை செயலாளர் சந்திரமோகன், பொதுமக்கள் யாரும் புயல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். புயல், மழை குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் மக்கள் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழக அரசு அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதால் அஞ்ச வேண்டாம் என்றும் சந்திரமோகன் கூறினார்.
தீயணைப்பு மீட்பு பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் வருவாய்துறை செயலர் கூறியுள்ளார். சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்தவும், மக்களை மீட்க படகுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் சந்திர மோகன் கூறியுள்ளார். தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். வெள்ள நீர் தேங்கும் அளவிற்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் குடியேற வேண்டும் என்றும் சந்திரமோகன் தெரிவித்தார்.