தேமுதிக நிர்வாகிகளுடன் பேசி வருகிறேன்.. குண்டு போடும் சந்திரகுமார்
ஈரோடு: மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்தபோதே அதன் கதி தெரிந்து விட்டது. அனைத்து மாவட்ட தேமுதிக நிர்வாகிகளும் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். நானும் பேசி வருகிறேன். மக்கள் தேமுதிக வலுப்படுத்தப்படும் என்று மக்கள் தேமுதிகவின் தலைவரான வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.
தேமுதிகவில் முக்கிய இடத்தில் இருந்தவர் சந்திரகுமார். ரசிகர் மன்றத் தலைவராக இருந்து பின்னர் தேமுதிக தொடங்கியதும் அரசியல் பிரவேசம் செய்தவர். தேமுதிகவில் மாநில கொள்கை பரப்புச் செயலாளராகவும், தேமுதிகவின் கட்சிக் கொறடாவாகவும் விளங்கியவர்.
விஜயகாந்த்தின் நிழல் போல பின் தொடர்ந்து வந்தவர். கடந்த 2011 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகினார். அவரும் எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச். சேகர் ஆகியோர் திமுகவுக்கு அணி மாறினர். மக்கள் தேமுதிக என்ற கட்சியையும் தொடங்கினர்.
2 பேரும் தாங்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிட்டனர். 3 பேரும் தோல்வியுற்றனர். 3 பேருக்கும் 2வது இடமே கிடைத்தது.
இந்த நிலையில் தேமுதிக சட்டசபைத் தேர்தலில் பெரும் அடி வாங்கியுள்ளது குறித்து சந்திரகுமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்தபோதே அதன் முடிவு அனைவருக்கும் தெரிந்து விட்டது. திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கட்சி தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் அவரது குடும்பத்தினரின் பேச்சை கேட்டு விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தார்.
இப்போது அவர் மட்டும் அல்லாமல் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து உள்ளனர். இதனால் தேமுதிகவின் எதிர்காலம் கேள்விக்குறியதாகி விட்டது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து தேமுதிக முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து பேசி வருகிறேன். விரைவில் இது குறித்து ஆலோசனை நடத்தி, மக்கள் தேமுதிகவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இவர் சொல்வதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. தேமுதிகவை மீண்டும்உடைக்க முயற்சிகள் நடக்கிறதா, முக்கியஸ்தர்கள் யாரேனும் கட்சியை விட்டு வெளியேறப் போகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.