Exclusive:ஜெ. மரணத்துக்கு விசாரணை, சசி கோஷ்டி ஓடனும்-இதுதான் எங்க நிபந்தனை:மனோஜ் பாண்டியன் 'பொளேர்'
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம், அதிமுகவிற்கு சசிகலா குடும்பம் முழுக்கு போட வேண்டும் இந்த நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே ஒன்றாக செயல்பட முடியும் என்கிறார் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியை சேர்ந்த மனோஜ
சென்னை: ஜெயலலிதாவின் மர்ம் மரணத்துக்கு விசாரணை வேண்டும்; சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் தங்களது நிபந்தனைகள் என கூறியுள்ளார் ஓபிஎஸ் கோஷ்டியின் மனோஜ் பாண்டியன்.
கோடை வெயில் தன் உக்கிர முகத்தை காட்டுவதால் அனல் காற்று வீசும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சரி வீட்டிலேயே அமைதியாக டிவி பார்க்கலாம் என்று டிவி சேனலை போட்டால் அதிமுக கோஷ்டியினர் கிளப்பும் அரசியல் சூடு படுபயங்கரமாக உள்ளது.
தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என அனைத்தும் அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளை உற்றுநோக்கி செய்திகளை பகிர்ந்து வருகின்றன. அதிமுகவை இணைப்பதற்கு சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுக அமைச்சர்கள் தீயாக வேலை செய்து வருகின்றனர்.
நிபந்தனை இதுவே
இது குறித்து தமிழ் ஒன் இந்தியாவிற்கு மனோஜ் பாண்டியன் அளித்த பேட்டி விவரம்:
அதிமுகவைவிட்டு சசிகலாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் வெளியேற வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை, ஏனெனில் அதிமுக குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டது எனவே இந்த நிபந்தனையை ஏற்றால் மட்டுமே எதிர் கோஷ்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மக்கள் ஆதரவு இருக்கிறது
அதிமுகவை சசிகலா கைபற்றியபோது அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தத்திற்கும் இதுவே பிரதானம். அதிமுக தொண்டர்களும் சரி, எங்கள் அணியைச் சேர்ந்தவர்களும் சரி உண்மைக்குப் புறம்பான விஷயங்களை எப்போதுமே செய்தது கிடையாது. அதனால் தான் மக்களின் ஏகோபித்த ஆதரவு எங்களுக்கே உள்ளது.
சிக்கலில் தினகரன்
நாங்கள் தான் வெற்றிக்கான அணி என்பதை உணர்ந்ததாலேயே எதிர் கோஷ்டி எங்களை வைத்து தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியினருக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்தது என அடுத்ததுத்து சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார் தினகரன்.
நிபந்தனையுடன் பேச்சு
அரும்பாடுபட்டு பலர் வளர்த்த கட்சியை தனது வசமாக்கிக் கொள்ள நினைத்த சசிகலா 4 ஆண்டுகள் வெளிவராதபடி சிறையில் உள்ளார். அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை, ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். இது வரை சசிகலா கோஷ்டியுடன் நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, இனி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஓ.பன்னீர்செல்வமே முடிவு செய்வார்.
இவ்வாறு மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.