எங்களிடம் 115 எம்.எல்.ஏக்கள்தான்.. பெரும்பான்மை இல்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
எங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: எங்களுக்கு 115 எம்எல்ஏ-க்கள்தான் உள்ளனர் என்றும், பெரும்பான்மையே இல்லை என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை திருவல்லிகேணியில் நடந்த சமபந்தி போஜனத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரும்பான்மை இல்லை
எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. எங்களுக்கு 115 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.
2 எம்.எல்.ஏக்கள் தேவை
பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. அந்த 2 எம்.எல்.ஏக்களும் விரைவில் எங்கள் அணிக்கு வருவர்.
சின்னம்மா போய் சசிகலா
6 மாத அரசியல் சூழலில் சின்னம்மா என்று அழைத்தவர்கள் இன்று சசிகலா என்று குறிப்பிடுகின்றனர். அதிமுகவின் ஏணி என்பது ஜெயலலிதா மட்டுமே.
கூவத்தூரில் தங்கியது ஏன்?
பணத்தாசைக்காக நாங்கள் கூவத்தூரில் தங்கவில்லை. ஒற்றுமைக்காகவே தங்கியிருந்தோம். அதிமுகவின் இரு அணிகளும் இணையவதில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தமிழக மக்களுக்கு நன்மை செய்யவே மத்திய அரசுடன் முதல்வர் இணக்கமாக உள்ளார்.
இவ்வாறு சீனிவாசன் கூறினார்.