ஜெயலலிதாவை 16 மா.செக்கள் கையெழுத்துடன் பொதுச்செயலராக்கியதே நான்... திவாகரன் அதிரடி
எம்ஜிஆர் இறந்த பின்னர் ஜெயலலிதாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக்கியது நாங்களே என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: ஜெயலலிதாவை அதிமுகவின் பொதுச் செயலராக்கியது நாங்கள்தான் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் டிடிவி தினகரனை சந்தித்தப் பின்னர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகத் தேர்வு செய்ததில் எங்களது பங்கு எதுவும் இல்லை. அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவின் வழிகாட்டுதலில் பேரில் எம்.எல்.ஏக்கள் அவரைத் தேர்வு செய்தனர்.
நான் எல்லோரின் தோள்களிலும் கை போட்டுப் போகிறவன். அதனால் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவன். எம்ஜிஆர் இறந்த போது அதிமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடியைப் போல மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் இறந்த போது 16 மாவட்டச் செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கியது நான்தான். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக்கியதும் நாங்கள்தான்.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்காக மற்றவர்களை நான் குறை சொல்லமாட்டேன். அதிமுகவில் ஓராண்டாக கட்சி நடவடிக்கை இல்லை. அதிமுகவில் கட்சி நடவடிக்கையைத் தினகரன் தொடங்குவதால் நான் ஆதரிக்கிறேன். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு 3 மாதங்களில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று திவாகரன் கூறியுள்ளார்.