அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க கண்காட்சி!
சென்னை: வெள்ளையனே வெளியேறு நிகழ்வின் 75 வருட நிறைவையொட்டி மத்தியஅரசின் செய்தி ஒலிபரப்புத்துறை சார்பில் நாம் சபதமேற்போம் என்ற கண்காட்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகளுடன், தற்போதைய மத்திய அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா போன்ற பல திட்டங்களை விளக்கும் படங்களின் காணொளிகளும் பெருமளவில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன
வெள்ளையனே வெளியேறு என்று மகாத்மா காந்தி தலைமையில் தொடங்கப்பட்ட இயக்கம்தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை விரைவுபடுத்த முக்கியக் காரணம். அந்தப் போராட்டம் நடைபெற்று 75 ஆண்டுகளாகி விட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில்
இதையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய அரசின் டிஏவிபி துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 27 முதல்
ஆகஸ்ட் 27ம் தேதி முதல் இன்று வரை அந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலரும் இதை வந்து பார்த்துச் சென்றனர். இந்த கண்காட்சியில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பான நிகழ்வுகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்த படங்கள் இடம் பெற்றிருந்தன.
மோடி அரசின் திட்டங்கள்
அதேசமயம், தற்போதைய மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்த பதாகைகள், காட்சிகள் அதிகம் காணப்பட்டன. சுதந்திரப் போராட்டம், குறிப்பாக வெள்ளையனே வெளியேறு தொடர்பான காட்சிகள் சற்று குறைவுதான்.
மனதில் பட்ட கருத்துக்கள்
இந்த கண்காட்சியில் மிகப் பெரிய வெள்ளை நிற போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் தங்களது மனதில் தோன்றும் கருத்துக்களை எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. பலர் விவசாயிகளை, விவசாயத்தைக் காப்போம் என்று எழுதியதைக் காண முடிந்தது.
இன்றுடன் முடிந்தது
இந்தக் கண்காட்சி இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. துணை ஜனாதிபதியான பின்னர் வெங்கையா நாயுடு முதல் முறையாக சென்னைக்கு வந்து தொடங்கி வைத்த கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.