தமிழகத்தில் நாங்கள் தேர்தல் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டோம்: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழகத்தில் பாஜக சார்பில் தேர்தல் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும், எப்பொழுது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் சென்னை வேளச்சேரியில் ரக்ஷாபந்தன் பண்டிகை சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட்டத்தின்போது காப்பு கயிற்றுடன் சேர்த்து காப்பீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாங்களும் தமிழகம் முழுவதும் நடக்கும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்தின்போது காப்புக் கயிறு கட்டுகையில் காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டை பரிசாக அளிக்கிறோம்.
தமிழகத்தில் பாஜக தேர்தல் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பணி பயிற்சி முகாம் திருச்சி பெரம்பலூரில் நடக்கிறது. தமிழகத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயாராகவே உள்ளது.
எந்த ஒரு விழாவையும் மக்களுக்கு நன்மை பயக்கும் விழாவாகவே பாஜக கொண்டாடி வருகிறது என்றார்.