சசிகலா, தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஜெயக்குமார்
சசிகலா, டிடிவி தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் தனக்கு எதிரான போஸ்டர்களால் தனக்கு விளம்பரம்தான் கிடைக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதைக் எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டதோடு ஆவணங்களையும் சமர்ப்பிக்க கூறியது.
இதைத்தொடர்ந்து ஆவணங்களை சரிபார்க்க அவகாசம் கோரிய தேர்தல் ஆணையம், ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.
லஞ்சம் கொடுத்த டிடிவி
இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தை தனக்கே பெற்றுத்தரமாறுக் கோரி டிடிவி தினகரன் பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்தார். மேலும் 50 கோடி ரூபாய் வரை அவர் பேரம் பேசியுள்ளார்.
சின்னம் கிடைப்பதில் சிக்கல்
இந்த விஷயங்கள் வெளியாகவே டிடிவி தினகரனை டெல்லி காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. டிடிவி தினகரன் மீதான இந்த குற்றச்சாட்டுகளால் அவர்களது தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆணையத்தின் முடிவுக்கு..
அதேபோல் கட்சிப் பொறுப்புகளில் சசிகலாவும் டிடிவி தினகரனும் நீடிப்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
தனக்கு விளம்பரம்தான்..
மேலும் சசிகலா, டிடிவி தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தனக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களால் தனக்கு விளம்பரம்தான் கிடைக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.