2016ல் காங்கிரஸ் ஆட்சி லட்சியம்; குஷ்புவுக்கு அமைச்சர் பதவி நிச்சயம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: 2016ஆம் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குஷ்புவிற்கு அமைச்சர் பதவி கொடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கட்டெரும்பாக தேய்ந்து வருகிறது. ஆளுக்கு ஒரு கோஷ்டி என்று தனித்தனியாக பிரிந்து செல்கின்றனர்.
வாசன் கோஷ்டி தனியாக பிரிந்து தமாகா தொடங்கிவிட்டனர்.
ஜெயந்தி நடராஜன் கழன்று கொண்டார். சிதம்பரம் வெளியேறும் நிலையில் இருக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று பேசி வருகிறார் அக்கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, மத்திய சென்னை காங்கிரஸ் சார்பில், கண்டன பொதுக்கூட்டம் அரும்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகை குஷ்புவும், இளங்கோவனும் பேசியதுதான் ஹைலைட்.
கரண்ட் இல்லையே
முதலில் மைக் பிடித்த நடிகை குஷ்பு, தி.மு.க., ஆட்சி காலத்தில் மின் பற்றாக்குறை இருந்ததால், மக்கள் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர்; ஆனால், இன்றும் அதே பிரச்னை தொடர்கிறது. என் வீடு இருக்கும் தெருவில், விளக்குகள் எரிவதில்லை என்று ஒரே போடாக போட்டார்.
காமராஜர் மட்டுமே
ஜெயலலிதாவை, 'மக்களின் முதல்வர்' என, அ.தி.மு.க.,வினர் அழைக்கின்றனர்; அவர்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை; தமிழகத்தில் மக்களின் முதல்வர், காமராஜர் ஒருவர் மட்டுமே.
காங்கிரஸ் ஆட்சி
பா.ஜ.கவினர், 'மிஸ்டு கால்' மூலம், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேரை, கட்சியில் உறுப்பினராக சேர்த்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், ஸ்ரீரங்கம் தேர்தலில், 5,000 ஓட்டுகள் தான் பெற்றனர்; 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றார் குஷ்பு.
சாப்பாட்டுக்கே பணமில்லையே
குஷ்புவைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கம், எங்களுக்கு கிடையாது; சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லாத நாங்கள், ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்; அதனால் தான், ஸ்ரீரங்கம் தேர்தலில் நிற்கவில்லை.
குஷ்பு அமைச்சர்
2016ஆம் ஆண்டில், தமிழகத்தில் காங்., ஆட்சிக்கு வந்தால், அமைச்சரவையில் குஷ்புவிற்கு கட்டாயம் இடம் தரப்படும்; பட்ட மேற்படிப்பு வரை, அனைவருக்கும் கல்வி இலவசமாக அளிக்கப்படும் என்றார் இளங்கோவன்.
அப்புறம் எப்படி?
என்னடா இந்த தங்க தமிழகத்திற்கு வந்த சோதனை... என்று யோசிக்கும் வாக்காளர் பெருமக்களின் கேள்வி இதுதான் மிஸ்டர் இளங்கோவன்.
சாப்பாட்டிற்கே பணமில்லாதவர்கள் எப்படி தேர்தலில் போட்டியிடுவீர்கள்?. எப்படி ஆட்சியமைப்பீர்கள்? குஷ்புவிற்கு எப்படி அமைச்சர் பதவி கொடுப்பீர்கள்? பதில் சொல்வாரா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.