ஆர்.கே நகரில் நாங்கள் ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் சீமான்
நாம் தமிழர் கட்சி, காய்ச்சலுக்குக் கொடுக்கும் கசாயம் போன்றது. நாங்கள் ஓட்டுக்குப் பணம் தர மாட்டோம் என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி, காய்ச்சலுக்குக் கொடுக்கும் கசாயம் போன்றது. நாங்கள் ஓட்டுக்குப் பணம் தர மாட்டோம் என்று கூறினார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றன.
திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை 23ஆம் தேதியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவு அடையும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன.
நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் வந்து இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஆர்.கே.நகரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளோம். இந்தத் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சரி செய்வோம் என்று கூறினார்.
ஊழல் குற்றவாளிகள்
ஊழல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது, மீண்டும் ஊழல் ஆட்சிதான் தொடரும். ஊழல் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும். ஊழலில் சேர்த்த பணத்தை மக்களுக்குக் கொடுத்து, ஓட்டு போடும்படி கேட்கின்றனர்.
ஒட்டுக்குப் பணம் தரமாட்டோம்
ஓட்டு போடுவதற்கு, மக்கள் அவர்களிடம் இருந்து பணம் வாங்கக்கூடாது. தேர்தல் ஆணையம் இது போன்ற நடைமுறைகள் தொடராமல் இருக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் ஓட்டுக்குப் பணம் தர மாட்டோம் என்றும் சீமான் தெரிவித்தார்.
கொலை மிரட்டல்
அரசியலில் பல வருடங்கள் அனுபவம் உடைய மதுசூதனனுக்கே கொலை மிரட்டல் வந்துள்ளது. எங்களைப் போன்றவர்களுக்கு இதே நிலைமைதான் ஏற்படும். எனவே, தேர்தல் ஆணையம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டார்.
நாங்கள் கசாயம்
நாம் தமிழர் கட்சி, காய்ச்சலுக்குக் கொடுக்கும் கசாயம் போன்றது. நாங்கள் ஓட்டுக்குப் பணம் தர மாட்டோம். ஆனால் எங்களுக்கு வாக்களித்தால், காய்ச்சல் குணமாவது போன்று, மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.