"கங்கை" பிரதமர் மனதுக்கு நெருக்கமானது... ஆர்.கே. நகரில் தாமரை மலரும் - தமிழிசை
கங்கை பிரதமர் மனதுக்கு நெருக்கமானது. ஆர். கே. நகரில் தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: கங்கை நதி பிரதமர் மோடியின் மனதிற்கு நெருக்கமானது, அதுபோல கங்கை அமரனும் மோடியின் மனதிற்கு நெருக்கமானவர் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கங்கை அமரன். இவரது பெயரை பரிந்துரைத்தது தமிழிசை சவுந்தரராஜன்தானாம்.
ஆர்.கே. நகரில் போட்டியிட நடிகைகள் கெளதமி, காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் விஜயகுமார் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் கங்கை அமரனின் பெயரை அனைவரும் ஒரே மனதுடன் டிக் அடித்தனர். காரணம் தமிழக மக்களிடம் கங்கை அமரன் அதிகம் அறிமுகமானவர் என்பதுதான்.
சென்னையில் உள்ள கமலாலயத்தில் இன்று தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்றார் கங்கை அமரன், அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை வேட்பாளராக பரிந்துரைந்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
வேட்பாளர் பெயர்
இதனையடுத்து செய்தியார்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கங்கை அமரன் பெயரை வேட்பாளராக தேர்வு செய்து கட்சித்தலைவர் அமித்ஷா, ஒருங்கிணைப்பாளர் முரளிதரராவ் ஆகியோரிடம் பேசிய போது ஒருமனதாக சரி என்று சம்மதம் சொன்னதாக கூறினார்.
கங்கை அமரன்
ஆர்.கே. நகரில் போட்டியிட வேண்டும் என்று பாஜக முடிவு செய்த உடனேயே மனதில் தோன்றிய பெயர் கங்கை அமரன்தான் என்றார் தமிழிசை சவுந்தரராஜன். எங்களின் மனதில் இருந்ததை கண்டுபிடித்து முன்கூட்டியே எழுதிய ஊடகங்களுக்கு நன்றி என்றும் தமிழிசை தெரிவித்தார்.
தாமரை மலரும்
பிரதமர் மோடியின் மனதிற்கு நெருக்கமானது கங்கை. எனவேதான் கங்கை அமரன் ஆர். கே. நகரில் வேட்பாளராக்கப்பட்டிருகிறார். ஆர். கே. நகரில் தாமரை நிச்சயம் மலரும் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கை
ஆர். கே. நகர் இடைத்தேர்தலுக்காக தனி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளதாகவும் கூறிய தமிழிசை சவுந்தரராஜன், ஆளுங்கட்சி, எதிர்கட்சி மீதான எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவானதாக மாறும் என்றும் கூறினார். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம் என்றும் கூறினார்.