தீபாவுடன் இணைந்து செயல்படுவோம்.. சொல்கிறார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான செம்மலை தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான செம்மலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என ஆயிரக்கணக்க்கான தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து அவரது வீட்டின் முன் குவிந்தனர். ஆனால் திடீரென சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் அரசியல் செய்ய ஆரம்பித்ததும் தீபாவுக்கு மவுசு குறைந்து ஓபிஎஸ் பக்கம் தொண்டர்கள் குவிந்தனர்.
இதனிடையே கடந்த 24ஆம் தேதி தீபா, எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செம்மலை கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் பற்றி நீதி விசாரணை நடத்தக் கோரி, குடியரசுத் தலைவரிடம், எங்கள் அணியைச் சேர்ந்த எம்.பிக்கள் இன்று மனு அளிக்க உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் உள்ள குளறுபடிகள் குறித்து உரிய ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் விரைவில் அளிக்க இருக்கிறோம்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் போராடியவர்களை கைது செய்த காவல்துறைக்கும் செம்மலை கண்டனம் தெரிவித்தார்