ஜெ. சிகிச்சைப் படம்... எந்த நேரத்திலும் வெளியிட விருப்பமில்லை.. டிடிவி தினகரன் திட்டவட்டம்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது. அதை எந்த நேரத்திலும் வெளியிட எனக்கு விருப்பமில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை எந்தச் சூழ்நிலையிலும் வெளியிடத் தயாரில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " நான் கட்சியை வழி நடத்த வேண்டும். ஜெயலலிதாவின் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் விரும்புகிறார்கள். சிலர் அதற்கு எதிராக இருக்கிறார்கள்.
அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்களும் விரைவில் திரும்பி வருவார்கள்.
எதிராக இருக்கும் அமைச்சர்கள்
சில அமைச்சர்கள் எனக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவாலோ அல்லது எங்களது குடும்பத்தினராலோ அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஜெ.மரணத்தில் சதி இல்லை
ஜெயலலிதா மரணத்தில் எந்தவிதமான சதித்திட்டமோ, சந்தேகமோ இல்லை. ஒரு பெரிய தலைவரின் மரணத்தை அரசியல் ஆக்க கூடாது.
ஜெயலலிதாவை சந்தித்தால் கிருமி தொற்று
அவர் சிகிச்சை பெற்ற போது, அவரை மற்றவர்கள் சந்தித்தால் கிருமி தொற்று ஏற்படும் என்பதற்குதான் டாக்டர்கள் அவர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை.
படம் வெளியிடுவதை ஜெ.விரும்பவில்லை
அவர் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட படத்தை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்பதால் வெளியிடவில்லை. அப்போது எடுக்கப்பட்ட படம் என்னிடம் உள்ளது.
சசிகலா கொடுத்த படம்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட படங்களை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா என்னிடம் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் அவற்றை வெளியிட நாங்கள் எண்ணவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கிடைத்தது
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது, அந்த படங்கள் எனக்கு கிடைத்தன. மருத்துவமனையில் பலவீனமாக அவர் இருப்பது மிகவும் வேதனையாக இருந்தது. எனவே, அந்தப் படத்தை எந்தச் சூழ்நிலையிலும் வெளியிட விரும்பவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.