3 தொகுதி தேர்தல்.. முதன் முறையாக அனைத்து வாக்குச்சாவடியிலும் வெப் கேமராக்கள்... ராஜேஷ் லக்கானி
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
பொதுவாக பதற்றம் நிலவும் வாக்குச் சாவடிகளில் மட்டும் வெப்கேமராக்கள் பொருத்தப்படும். ஆனால் இந்த முறை 3 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்படும். அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த வாக்குப் பதிவுகள் அனைத்தையும் வெப் கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள 245 வாக்குச் சாவடிகளில் 1104 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அங்கு 980 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதியில் உள்ள 276 வாக்குச் சாவடிகளில் 980 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அங்கு 1104 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 291 வாக்குச் சாவடிகளில், 1164 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 1164 தேர்தல் பணியாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.