"வெல்டிங்" ஆறுமுகத்தோட இன்னொரு முகத்தை பார்த்ததில்லையே.. ஆர்.கே.நகர்ல பார்ப்பீங்க!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் நிர்வாகியான ஆறுமுகம் போட்டியிடும் 4வது தேர்தல் இது. தோற்றாலும் அசராமல் தான் போட்டியிடுவதாக இவர் கூறுகிறார்.
இதற்கு முன்பு ஆறுமுகம், ஸ்ரீரங்கம், அம்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இப்போது 4வது முறையா ஆர்.கே.நகரில் களம் கண்டுள்ளார். "உற்சாகத்துடன்" பிரசாரத்திலும் குதித்து விட்டார்.
மது குடிப்போருக்கான விழிப்புணர்வையே தனது சங்கம் செய்வதாக கூறும் ஆறுமுகம், மது குடிப்பதற்கு எதிரான போக்கை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறாராம்.
49 வயதாகும் ஆறுமுகம் கொரட்டூரில் வசித்து வருகிறார். மது குடிப்போர் விழிப்புணர்வு கழகம் அமைப்பில் நிர்வாகியாக இருக்கிறார்.
வெல்டிங் ஆறுமுகம்
ஆறுமுகத்திற்கு இன்னொரு முகம் உண்டு. அது வெல்டிங் ஆறுமுகம். அதாவது இவர் ஒரு வெல்டர். மிகவும் ஏழ்மையானவர். கையில் காசு இல்லாமல் இருந்தாலும் கூட தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக இருந்தவர். இவரிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான ரூ. 5 ஆயிரம் டெபாசிட் பணம் கூட இல்லை.
பாட்டில் விற்று டெபாசிட்
இருந்தாலும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல சாலையோரம் வீசப்பட்ட மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பை, வாட்டர் பாட்டில் போன்றவற்றை சேகரித்து வந்துள்ளார். அதை விற்று கையில் கொஞ்சம் காசு போட்டு டெபாசிட் தொகையைக் கட்டினார். கடந்த 22ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
தாலி ஏந்தி வேட்பு மனு தாக்கல்
இதுகுறித்து இவர் கூறுகையில், சில போராட்டங்கள் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படுவதில்லை. எனது தேர்தல் போராட்டமும் அப்படித்தான். மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் வேட்பு மனுதாக்கல் செய்ய சென்ற போது தாலியை ஏந்தியபடி சென்றேன். மது குடித்து பலியாகும் ஆண்களால் எத்தனையோ பெண்கள் விதவையாகிறார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே நான் அப்படி சென்றேன்.
கடைகளில்தான் வாக்கு சேகரிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் 25 மதுக்கடைகள் உள்ளன. நாங்கள் தினமும் அங்கிருந்துதான் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் பிரசாரத்தின்போது குடிகாரர்களிடம் வாக்கு கேட்க திட்டமிட்டுள்ளோம். மது குடிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைடிஸ்சாக ஊறுகாயை பயன்படுத்துகிறார்கள். அது கல்லீரலை மிகக் கடுமையாக பாதிக்க செய்து விடும்.
ஆப்பிள் சைட்டிஷ்
இனி மது குடிப்பவர்கள் சைடிஸ்சாக ஊறுகாயை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக ஆப்பிள் பழம் சாப்பிடுங்கள் அல்லது காய்கறி வகைகளைப் பயன்படுத்துங்கள். மதுவின் தீமையை எதிர்த்து நான் போட்டியிடுவதால் பெண்கள் எனக்கு அதிக அளவில் ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறேன்.
மனம் திருந்துங்கள்
ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரு.23000 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் நிறைய பெண்கள் விதவைகளாகிறார்கள். இதை மதுபானம் குடிப்பவர்கள் உணர வேண்டும். மது குடிப்பவர்கள் மனம் திருந்தி எனக்கு வாக்களித்தால் போதும், நான் எளிதில் வெற்றி பெறுவேன் என்றார் அசராமல்.
அப்படிப் போடு அருவாளை சியர்ஸ் !