தீபாவளியன்று சரமாரியாக பட்டாசு வெடித்ததில் 57 தீ விபத்துக்கள்... 9 பேர் மரணம்
சென்னை: தமிழகம் முழுவதும் மழையோடு தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் இந்த ஆண்டு தீவிபத்து குறைந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்களால் தமிழகம் முழுவதும் 57 இடங்களில் தீ விபத்துகள் நடந்தன. 1,200 சாலை விபத்துகளில் 9 பேர் இறந்தனர் எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளியும் தீ விபத்தும்
தமிழகத்தில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப் பட்டது. பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவும், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
சென்னையில் 26 விபத்துக்கள்
தீபாவளியன்று பட்டாசு வெடித்தவர்களால் சென்னையில் 26 இடங்களில் தீ விபத்துகள் நடந்தன. இதில் 24 விபத்துகள் ராக்கெட் பட்டாசுகளாலும், 2 விபத்துகள் சாதாரண பட்டாசுகளாலும் ஏற்பட்டன.
4 குடிசைகள் எரிந்தன
அசோக் நகர், எண்ணூரில் 4 குடிசைகள், அமைந்தகரையில் ஒரு கார், மாதவரத்தில் ஒரு பைக் ஆகியவை பட்டாசு தீயில் சேதம் அடைந்தன.
ராக்கெட்டில் எரிந்த ஓலை
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோயிலில் தென்னை ஓலை கூரையில் ராக்கெட் பட்டாசால் தீப்பிடித்தது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்துகள் தவிர்க்கப்பட்டன.
57 தீ விபத்துக்கள்
தமிழகம் முழுவதும் மொத்தம் 57 தீ விபத்துகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட மிகக் குறைவானதாகும். ஏனெனில் கடந்த ஆண்டு 212 தீ விபத்துக்கள் ஏற்பட்டன.
மழையால் ஈரம்
தீபாவளிக்கு முந்தைய நாளிலும், தீபாவளியன்றும் பெய்த மழையால் கூரைகள் ஈரமாக இருந்தன. இதன்காரணமாகவும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
22000 அழைப்புகள்
அவசர ஆம்புலன்ஸ் சேவையான 108-க்கு தீபாவளி நாளில் மட்டும் 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இதில் 3,413 சரியான அழைப்புகளுக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவி செய்துள்ளனர். அவசர மருத்துவ தகவல்களை போனிலேயே கூறும் 104 என்ற எண்ணுக்கு 148 பேர் தொடர்பு கொண்டு, தீக்காயம் உட்பட பல மருத்துவ தகவல்களை கேட்டு பயன் அடைந்துள்ளனர்.
9 பேர் மரணம்
தீபாவளி தினத்தில் தமிழகத்தில் சுமார் 1,200 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்ட விபத்துகள் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களால் நடந்துள்ளது தெரியவந்தது.