மனித வளத்தை அழித்துவிட்டு எந்த வளர்ச்சியை எட்டுவார்கள்?
நூறாவது நாளை எட்டி இருக்கிறது ஸ்டெர்லைட் போராட்டம். இது தொடர்பாக பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் நூறு நாட்கள் கடந்தும் மக்களின் போராட்டத்துக்கு அரசு செவி சாய்க்கவில்லையா? மக்களின் பதற்றம் தேவையற்றதா? என்று கேட்டு இருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
" நீர், நிலம் ,காற்று என்று மக்கள் உயிர் வாழத் தேவையான அடிப்படையே மாசு படும்போது போராடாமல் எப்படி இருப்பார்கள்? உயிருக்கு உலை வைக்கும் தாமிர உருக்காலை விதிகளின் படி செயல் படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய அரசு கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் போராடாமல் என்ன செய்ய?" என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
சக்தி சரவணன், "மக்களாட்சி அரசுகள் முதலீட்டாளர்களின் நலன்களுக்காக இயங்கத் தொடங்கியதுமே மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலன்களைப் புறக்கணிக்க தொடங்கியது எனலாம். தொலைநோக்கற்ற சிலரது சுயநலன்களுக்காகச் சுரண்டப்படும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக இயங்க வேண்டிய அரசுகள் சரிவர இயங்காததாலேயே மக்கள் அறப்போராட்டங்கள் முடிவில்லா போராட்டங்களாக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது." என்று பதிவிட்டுள்ளார்.
போராட்டத்தை முற்ற விட்டது அரசின் தப்பு. தேவையுள்ள போராட்டம் தேவையற்ற போராட்டம் என்று ஒன்றுமில்லை. போராட்டம் என்றவுடனேயே அரசு செவி சாய்த்திருக்க வேண்டும். கூப்பிட்டு பேசியிருக்க வேண்டும். அவர்களுக்கு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை என்கிறார் சுப்பு லஷ்மி.
நெல்லை முத்துசெல்வம், "மத்திய மாநில அரசுகள் மக்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை என்பது தான் உண்மை. வளத்தை அழித்துவிட்டு வளர்ச்சியை உருவாக்க நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள். மனித வளத்தை அழித்துவிட்டு எந்த வளர்ச்சியை எட்டி பிடிக்கப் பார்க்கிறார்கள் என தெரியவில்லை."
"பொது மக்கள் மீது அக்கறை இல்லாத தமிழக அரசு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது" என்கிறார் புலிவலம் பாஷா.
ஏ.எஸ்.குமார், "அறப் போராட்டம், அஹிம்சை போராட்டம் போன்றவை வெறுப்புணர்வை அடிப்படையாக கொண்டிருப்பதால் முடிவு பயங்கரவாத முறையில்தான் முடியும். பழைய வரலாறுகளே அதற்கு சாட்சி. எனவே அவைகள் ஜனநாயகத்திற்கு எதிரானவைகள்." என்கிறார்.
100 நாட்கள் கடந்தும் மக்களை கண்டு கொள்ளாத அரசை எதிர்ப்பது தவறாகாது என்கிறார் ஜியா நஷ்கி.
"பணம் வாங்கி ஓட்டுப்போட்டதன் விளைவு. தமிழா்கள் கொலை செய்யபடுகின்றனா்," என்கிறார் வெங்கட் வான் சுவாமிநாதன்.
பிற செய்திகள்:
- 20 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா சென்ற இந்திய அமைச்சர்
- சினிமா விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல்
- சாமானிய பெண்ணுக்கு வந்த இளவரசர் திருமண அழைப்பிதழ்: நெகிழ வைத்த அங்கீகாரம்!
- இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்