தலையில் இரட்டை இலை.. "தர லோக்கலாக" மாறிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கை வலிக்க வலிக்க பல மணிநேரம் இரட்டை இலையை தாங்கி பிடித்திருந்த அவர், தற்போது தலையில் பொருத்திக் கொள்ளும் இரட்டை இலையை தாங்கி வலம் வருகிறார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
அதிமுக வேட்பாளாரான முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தண்டையார்பேட்டை, வ.உ.சி நகர், காந்தி நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதேபோல போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதுவண்ணாரப்பேட்டையில் வீதி வீதியாகச் சென்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். எதையுமே வித்தியாசமாக செய்து அம்மாவின் குட் புக்கில் இடம் பெற வேண்டும் என்று நினைப்பவர் செந்தில் பாலாஜி.
ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்பதற்காக தாடி வளர்த்தார். பின்னர் கரூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் மொட்டை அடித்தார். மாரியம்மனுக்கு இளநீர் காவடி எடுத்தார். அப்புறம் தீச்சட்டி தூக்கினார்.
தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர், கட்சி சின்னத்தை தலையில் பொறுத்திக்கொண்டு வாக்கு சேகரித்தார். இரவு நேரத்தில் அது பேட்டரி உதவியுடன் ஜொலிக்கிறது. இந்தப் புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் ஜெக ஜோதியாய் பரவி வருகிறது.
இப்படி அமைச்சர்களே தரை லோக்கலுக்கு இறங்கினால் பிற மாநிலத்தவர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். அட அது கிடக்குது பாஸ் இப்படி எல்லாம் கவனம் ஈர்த்தால்தான் அடுத்த தேர்தல்ல சீட் கிடைக்கும். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!