தாதுமணல் விவகாரத்தில் அரசு என்ன செய்ய முடிவு? ... மு.க. ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி
சென்னை: தாது மணல் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தாதுமணல் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பதில் அளித்தார்.
சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தாது மணல் குவாரிகளில் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், நான்கு வருடங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் ககன்தீப்சிங் பேடி அளித்த அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ககன்தீப் சிங் அளித்த அறிக்கைக்குப் பிறகு திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அவரது குழுவே ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தாது மணல் குவாரிகள் அரசினால் தடை செய்யப்பட்டு நடை சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ககன்தீப் சிங் அறிக்கையின் மீதான விசாரணை வரும் செப்டம்பர் 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதுமட்டுமில்லாமல், உயர்நீதிமன்றத்தில் தாதுமணல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசகராக சுரேஷ் நியமிக்கப்பட்டார்.
சத்தியப்பிரதா சாகு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசின் அணுசக்தி துறை, ஐ.பி.எம், சுங்கம் மற்றும் கலால் துறை அலுவலர்களுடன் கனிமம் மற்றும் சுரங்கத் துறை, வருவாய்த்துறை, நில அளவை ஆகிய துறைகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழு தற்சமயம் கடற்கரை மாவட்டங்களில் தாது மணல் மற்றும் அணுசக்தி கனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் செயற்கைகோள் உதவியுடன் கடற்கரை மாவட்டங்களில் உள்ள தாது மணல் படிவு பகுதிகள் முழுவதும் கண்காணித்து அறிக்கை தர கோரியுள்ளோம். மேலும் சிறப்புப் படை அமைக்கப்பட்டு அவர்கள் உரிய கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தால் நியமிக்கபட்ட ஆலோசகர் சுரேஷ் தனது அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.