வரப்போகும் பருவ மழை- வெள்ளத்தை தடுக்க வழி என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை: வெள்ளத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும், பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை ஒரு வாரத்தில் கூட்டி வெள்ளப் பாதிப்புகள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் டிசம்பரில் பெய்த கனமழையாலும், செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதாலும் சென்னையே மூழ்கியது. பொதுமக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளானார்கள். இதனையடுத்து, பாதிப்பு தொடர்பாக தானாகவே முன்வந்து வழக்கை பதிவு செய்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் அமர்வு விசாரித்து வருகிறது. வெள்ளச் சேதங்கள் ஏற்படும் போது பிரச்சனைகளை எதிர் கொள்ள பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நீதிமன்றமே பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை அமைக்கும் என்று ஐகோர்ட் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், பேரிடர் மேலாண்மை தொடர்பாக தலைவர், இணைத் தலைவர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளதாகக் கூறி அதற்கான ஆணையை கோர்ட்டில் அளித்தார்.
இந்தக் குழுவில், வருவாய் நிர்வாகத்துறை முதன்மைச் செயலர் கே.சத்யபால் தலைவராகவும், வருவாய் துறைச் செயலர் பி.சந்திரமோகன் இணை தலைவராகவும், அண்ணா பல்கலைக்கழக பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை மைய பேராசிரியர் திருமலைவாசன், ஐஐடி சென்னை பேராசிரியர் தேவேந்திர ஜலிஹால், என்ஐடி பேராசிரியர் மோசஸ் சாந்தகுமார் உள்ளிட்ட 18 பேர் உறுப்பினர்களாகவும் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், சென்னை பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் புதிதாக கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருவதற்குரிய புகைப்பட ஆதாரங்களை தலைமை நீதிபதியிடம் அளித்தார்.
இதனையடுத்து, அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைக்குழு ஒரு வாரத்தில் கூடி வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, இந்த விசாரணை அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீர்நிலைகளை முறையாக தூர்வாராததுதான் சென்னை வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்று கூறி, அவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பாக தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், தூர்வாரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென்றும் நீதிபதிகளிடம் கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், தூர்வாரும் பணிகளை நீங்கள் முடிக்கும் வரை பருவமழை உங்களுக்காக காத்து இருக்காது என்று மிகக் கடுமையாக கூறினார். மேலும், தூர்வாருவது தொடர்பான அறிக்கையை நவம்பர் 15ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.