கருணாநிதி மௌனமானது போல அரசியலும் மௌனமாகிவிட்டது... ஸ்டாலினை சீண்டும் அழகிரி!
திமுக தலைவர் கருணாநிதி இல்லாத அரசியல் மௌன அரசியல் என்று கூறி ஸ்டாலினை சீண்டியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி.
வேதாரண்யம் : திமுக தலைவர் கருணாநிதி மௌனமானது போல தமிழக அரசியலும் மௌனமாகிவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக சார்பாக மத்திய உர மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக இருந்தவர். ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட பிறகு அழகிரிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விமர்சித்ததற்காகவும், தி.மு.க செயற்குழு,பொதுக்குழு முடிவுக்கு எதிராக அழகிரி செயல்பட்டதால் கட்சியில் இருந்து இரண்டாவது முறையாக 2014ம் ஆண்டு நீக்கப்பட்டார்.
ஓங்கிய ஸ்டாலின்
அதற்குப் பிறகு அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவேயில்லை. கட்சியில் ஸ்டாலினின் கை ஓங்கி இருப்பதால் இனியும் அதற்கான சாத்தியங்கள் வெகுக் குறைவே என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஒதுங்கிய அழகிரி
அரசியலை விட்டு ஒதுங்கியே இருக்கும் அழகிரி அண்மையில் நடந்து முடிந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் சட்டசபையில் அடியெடுத்து வைத்த வைரவிழா கொண்டாட்டம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அழகிரி பங்கேற்கப் போவதாக திடீர் பரபரப்பு கிளம்பியது.
பரபரப்பு
இதனிடையே மே மாதம் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியை சந்திக்கச் சென்றுவிட்டு அவர் ஓய்வில் இருந்ததால் தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பினார். அப்போது அளித்த பேட்டியின் போது கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.
ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு
ஆனால் வைரவிழா நிகழ்ச்சியில் அழகிரி பங்கேற்கவில்லை. இதனிடையே இன்று நடைபெறும் முரசொலி பவளவிழா நிகழ்ச்சி நடைபெறுவதால் அதில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.
மௌனமான அரசியல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து மட்டும் கருத்து தெரிவித்தார். அப்போது கருணாநிதி மௌனத்திற்குப் பிறகு தமிழகத்தில் அரசியலே இல்லை அதுவும் மௌனமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
பொரி கிளப்பிய பேட்டி
தமிழகத்தில் எதிர்க்கட்சியான திமுக ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. அதிமுக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு, குட்கா விவகாரம் என்று அனைத்திலும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஸ்டாலின் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசியலே நடக்கவில்லை என்று அழகிரி கூறியிருப்பது திமுகவில் மீண்டும் பொறியை கிளப்பிவிட்டிருக்கிறது.