பிக்பாசில் கதறி கதறி அழுத வையாபுரி.. காரணம் என்ன?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது எபிசோடில் அழுகை, சண்டை, சச்சரவு, முதல் காதல் அனுபவம் மற்றும் பிக்பாஸ் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்து என களைகட்டியது.
நடிகர் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக் பாஸ் வீட்டில் நமீதா, ஓவியா, அனுயா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி உள்ளிட்ட 15 பேர் தங்கியுள்ளனர். அதில் வையாபுரியும் ஒருவர். அவர் கதறி, கதறி அழுவதை போன்ற காட்சி வீடியோவை வெளியிட்டது விஜய் டிவி. அதில் கதறியழும் வையாபுரியை பார்த்து, "ஒன்னுமில்லண்ணே, ஒன்னுமில்லண்ணே" என ஆறுதல்படுத்துகிறார் ஜூலியானா.
செட்டிலுள்ள மேலும் சிலரும் கண்ணை கசக்குகிறார்கள். இதனால் இன்று காலை முதலே பரபரப்பு கிளம்பியது. வையாபுரி எதற்காக அழுதார் என்பதை தெரிந்துகொள்ளவும் 3வது நாள் நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
இன்றைய நிகழ்ச்சியில் வையாபுரி அழுகைக்கான காரணத்தை கூறினார். மனைவி, குழந்தைகளை குடும்பத்தை பிரிந்து இருப்பதால் தான் தாம் அழுவதாக கூறியுள்ளார். அவருக்கு கவிஞர் சினேகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவரும் ஆறுதல் கூறினர். இத்தனை வருட காலமாக காலை எழுந்ததும் என மனைவிக்கு குட் மார்னிங் சொல்வேன். இப்போது யார் யாருக்கோ சொல்கிறேன். மனைவிக்கு சொல்ல முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதார்.
இதெல்லாம் தெரியாமல் தான் வையாபுரி நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் அவர்கள் காட்டும் பில்டப்பை பார்த்து இன்று ஒளிபரப்பான காட்சிகளை பார்த்து மக்கள் நொந்து போயுள்ளனர். இப்படி பெரிய பில்டப் காட்டி கடைசியில் ஒன்னுமில்லாத உப்பு சப்பு இல்லாத காரணமாக போனது வையாபுரி அழுகை.பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்து மக்கள் செம கடுப்பில் உள்ளனர்.