முதல்வருடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேசியது என்ன? அரசு விளக்கம்
நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசியது குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி இன்று (1.3.2017) தலைமைச் செயலகத்தில், நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் சி. வேலு, ஏ. இராமநாதன், கே. தட்சிணாமூர்த்தி, ஆர்.எஸ், விஜயகுமாரன், வை.கோ. இராமநாதன், ஏ.எஸ். பன்னீர், வை. இராஜேந்திரன், சோ. வேல்சாமி, .கே.வி. செந்தில்தாஸ், ஆர். இராம்குமார், வை. பார்த்திபன் ஆகியோர் சந்தித்து, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்துமாறு கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.
தற்போது நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றும் காவேரி கடைமடை பகுதியில் உள்ள இக் கிராமத்தில் போதிய நீர் ஆதாரம் இன்றி நிலத்தடி நீர் மூலமே விவசாயம் தற்போது நடைபெறுவதாகவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், மாநில அரசு இத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்க கூடாது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளின் கோரிக்கையை கவனமாக கேட்டுக் கொண்ட முதலமைச்சர், இது குறித்து 27.2.2017 அன்று பாரதப் பிரதமரை தான் நேரில் சந்தித்த போது நெடுவாசல் விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துரைத்ததாகவும், அதை அப்போதே ஊடகம் மூலம் தெரிவித்ததாகவும் கூறினார். நெடுவாசல் கிராம மக்களின் உணர்வுகளை பாரதப் பிரதமரிடம் நேரடியாக கொண்டு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இத்திட்டத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம் சுரங்க குத்தகை உரிமம் மாநில அரசு வழங்கவில்லை எனவும், விவசாயிகள் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதால் நெடுவாசல் கிராமத்தில் இத் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்றும், எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி, தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்தத் திட்டமானாலும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது எனவும் மாநில அரசின் இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், , புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் இரா. பழனிசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.