தமிழகத்தில் அடுத்தது தேர்தலா, இடைத்தேர்தலா?
தமிழக அரசியலில் நாளொரு நடவடிக்கை அரங்கேறும் நிலையில் இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தின் கையில் அரசின் இறுதி தீர்ப்பு உள்ளது.
சென்னை : தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் வெறுப்பின் உச்சத்திலேயே உள்ளனர். அதிகாரப் போட்டியால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை நம்பி காத்திருக்கின்றனர் அரசியல்வாதிகளும், மக்களும்.
ஜெயலலிதா என்னும் இரும்புப் பெண்மணி உயிரிழந்ததையடுத்து அதிமுக அரசியலும் சரி ஆட்சியும் சரி கட்டுப்பாடில்லாமல் தரிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் சசிகலா தலைமையை ஏற்று அவருடைய காலில் விழுந்து பொதுச்செயலாளர் ஆக்கினார்கள். பின்னர் அவர் காட்டியவர் என்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு வாக்களித்தனர். சசிகலா குடும்பத்திற்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் தற்போது கை கோர்த்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
கட்சியும், ஆட்சியும் தங்கள் வழிகாட்டுதலில் சிறப்பாக நடப்பதாக முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்ததால் 18 எம்எல்ஏக்கள் தினகரன் பின்னால் சென்றனர். முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கூறியதால் அவரது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
எப்படி செல்லும்?
முதலில் திமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கிவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்து, அது நீதிமன்றத்தின் உத்தரவால் தடை செய்யப்பட்டது. அதனால் இன்று 18 எம்எல்ஏக்கள் கட்சித் தாவியதாக் குற்றம்சாட்டி தகுதி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் 18 எம்எல்ஏக்கள் எந்த கட்சிக்கும் தாவவில்லை, அவர்கள் கட்சியிலேயே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக அம்மா அணியில் இருக்கும் போது இந்த உத்தரவு எப்படி செல்லும் என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சட்ட உதவியுடன்
ஆனால் சட்ட உதவியுடன் நிச்சயம் இந்த தகுதி நீக்கத்தை திரும்பப் பெற வைப்போம் என்று உறுதியாக உள்ளனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள். பெங்களூரில் எடியூரப்பா அரசுக்கு எதிராக செயல்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டதை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது, இந்த வழக்கை முன் உதாரணமாக வைத்து தமிழக அரசியல் சூழலையும் ஒப்பிட்டுக் காட்ட சட்ட நிபுணர்கள் தயாராகி வருகின்றனர்.
அவதியில் மக்கள்
எது எப்படியாக இருந்தாலும் தமிழக அரசியல்வாதிகளால் மக்கள் வெறுப்பு நிலைக்கே வந்துள்ளனர். ஓராண்டாகியும் நடக்காமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல்,உள்ளாட்சிகளில் நிலவும் பிரச்னைகளை கண்டுகொள்ள ஆளில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள். பல மாதங்களாக போடப்படாமல் இருக்கும் சாலைகள், சிறு மழைக்கே தாங்காத குண்டும் குழியுமான சாலைகள் என்று மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
வாட்டும் விலை உயர்வு
சாலைப் பணியைப் போல கொசுக்கள் அதிகரித்தன் விளைவாக டெங்கு காய்ச்சல் என்று சாலை தொடங்கி ஆரோக்கியம் வரை சிக்கலை சந்தித்து வேதனையில் உள்ளனர் மக்கள். மற்றொரு புறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசு விதித்துள்ள வாட் வரியே காரணம் என்று தனியார் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தீர்வு இல்லை
அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு சுமையை ஏற்படுத்தி வருகிறது. டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வு காண அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்எச்சரிக்கை நடவடிக்கை என்ன?
தண்ணீர் பஞ்சம் நிலவிய நிலையில் கடந்த 2 மாதங்களாக பெய்யும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளாக என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்ற அச்சம் மக்களிடத்தில் நிலவுகிறது.
நீதிமன்றத்தின் கையில்
அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள போராட்டம் புதன்கிழமைக்கு பிறகு எப்படி மாற்றம் காண இருக்கிறது என்று தெரியவில்லை. 6 மாத அரசியலில் பதவிக்காக நடக்கும் சண்டை தான் நடக்கிறது என்று புலம்புகின்றனர் மக்கள். இந்நிலையில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால் அந்த 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்குமா, அல்லது நீதிமன்றத் தீர்ப்பின் படி இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றால் சட்டசபை தேர்தல் நடக்குமா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அமையும்.