சசிபெருமாள் மரணம்... உண்மையில் நடந்தது என்ன?- நேரில் பார்த்தவர்கள் பரபரப்புத் தகவல்
கன்னியாகுமரி: செல்போன் கோபுரம் மீது ஏறிப் போராடிய சசிபெருமாள் ரத்தவாந்தி எடுத்ததாகவும், கயிறு கட்டி கீழே இறங்க முயற்சித்த போது மயங்கி கீழே விழுந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தார். சசிபெருமாளின் இந்த திடீர் மரணம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிபெருமாள் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டதாகவும், அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்பில் ரத்தம்...
ஆனால், சம்பவத்தின் போது எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் அவரின் மார்புப் பகுதியில் ரத்தம் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த சசிபெருமாளின் சட்டையில் எவ்வாறு ரத்தம் வந்தது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
கம்பி குத்தியதா...
செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கும் போது அவரது சட்டையில் கம்பி ஏதும் குத்தி விட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அது சசிபெருமாளின் ரத்தவாந்தி என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
5 மணி நேரப் போராட்டம்...
மேலும் இது தொடர்பாக அவர்கள் கூறுய தகவல்களாவன :
காலையிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் செல்போன் கோபுரம் மீது ஏறியுள்ளார் சசிபெருமாள். சுமார் 5 மணி நேரங்களுக்கு மேலாக அவர் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி டாஸ்மாக்கை மூடும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரத்த வாந்தி...
நேரம் செல்லச் செல்ல வெயில் காரணமாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் மதியம் ஒரு மணியளவில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தானே கீழே இறங்க அவர் முயற்சித்துள்ளார்.
திடீர் மயக்கம்...
கயிறு மூலம் இறங்க முற்பட்ட அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவரை, தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று மீட்டுள்ளனர்.
மரணம்...
பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
குழப்பம்...
ஆனால், மருத்துவமனையில் எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் சசிபெருமாளின் கைகளில் குளுக்கோள் ஏற்றுவதற்கான ஊசி செருகப் பட்டுள்ளது. அப்படியானால், சிகிச்சைப் பலனின்றி தான் சசிபெருமாள் இறந்தாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை...
இது குறித்து தெளிவான தகவல் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே, பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே சசிபெருமாளின் மரணத்திற்கான தெளிவான காரணங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.