234 தொகுதிகளுக்கும் தனி தனியாக தேர்தல் அறிக்கை ரிலீஸ் செய்யும் ஜெ.,? - இலவசங்கள் தாராளம்!!
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கை 06.05.2016 வெள்ளிகிழமை அமாவாசை அன்று ஜெயலலிதா வெளியிட உள்ளார் என்றும், 234 தொகுதிக்கும் தனி தனியே தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அட்சய திரிதியை நாளான மே 9ம் தேதியன்று தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான் சொன்னதையும் செய்தேன்... சொல்லாததையும் செய்தேன்... இன்னும் நிறைய செய்வேன்... இது ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் கூறி வரும் வார்த்தைகள். பிரதான எதிர்கட்சிகளான திமுக, தேமுதிக தொடங்கி நேற்று கட்சி தொடங்கிய தமாகாவரை தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் இத்தனை தாமதம் ஏன் என்பதுதான் இப்போது அனைவரின் முன் நிற்கும் கேள்வியாக உள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவசமாக மின்சாரம், பைக், கார் போன்றவற்றை தருவதாக அறிவிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை தெரிந்து இது போன்ற பொய்யான அறிக்கையை அவர்கள் தர உள்ளனர் என்று எதிர்கட்சிகள் இப்போதே ஒருவித பீதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதில் இருந்து அதில் எண்ணற்ற இலவச அறிவிப்புகள் கொட்டிக்கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
தேர்தல் அறிக்கை
ரூபாய்க்கு மூன்றுபடி லட்சியம்.. ஆனால் ஒரு படி நிச்சயம் என்று அண்ணா காலம் தொடங்கி இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், ஆடு மாடுகள் கொடுக்கும் ஜெயலலிதா காலம்வரை தேர்தல் அறிக்கை ஒரு கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எதிர்கட்சியினரின் தேர்தல் அறிக்கை
திமுக, தேமுதிக, மக்கள் நலகூட்டணி, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டன.
அனைத்துக் கட்சிகளுக்கும் முன்பாகவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விடுவது ஜெயலலிதாவின் வழக்கம். ஆனால், இந்தமுறை இன்னமும் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிடவில்லை.
ஜெ. வைத்துள்ள சஸ்பென்ஸ்
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு, விவசாயம்-கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட திட்டங்கள் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற விவரங்களை அறிய எதிர்க்கட்சியினர் உள்பட அனைத்துத் தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
இலவசங்கள் ஏராளம்
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இரண்டு வாரங்கள் ஆனபிறகும் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருப்பதற்குக் காரணம், அதில் பல்வேறு இலவசப் பொருட்களுக்கான அறிவிப்புகள் உள்ளன என்கிறார்கள்.இப்போதே அதனைச் வெளியிட்டால், மக்கள் மறந்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
என்னென்ன இருக்கலாம்?
கச்சத்தீவு விவகாரம், ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை உள்ளிட்டவைகள் முக்கிய அம்சங்களாக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது. அதே போன்று இலவச திட்டங்கள் சிலவும் இடம் பெறலாம் என தெரிகிறது.
முதியோர் பென்சன் இரட்டிப்பு?
அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கைம்பெண், முதியோர் உதவித்தொகை இரட்டிப்பு, மருத்துவ காப்புறுதி திட்டத்துக்கான உதவிப் பணம் ரூ.25 ஆயிரத்திலிருந்து 4 லட்ச ரூபாயாக உயர்வு. (சிகிச்சையோடு மருந்துகளும் பெறலாம்) என்று கூறப்படுகிறது.
அரசு இலவச கேபிள் டிவி
சிறு குறு விவசாயிகளின் கடன்கள் மொத்தமும் தள்ளுபடி, வீடுகளுக்கு இலவச அரசு கேபிள், முன்னர் நடைமுறையில் இருந்த அதே பென்ஷன் ஸ்கீம் மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும்.
வாசிங்மெசின், பிரிட்ஜ்
முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து ஜெயலலிதாவிடம் கடந்த மாதமே ஒப்படைத்துவிட்டனர். இதில் வாஷிங் மெஷின் அல்லது ஃபிரிட்ஜ் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டு உள்ளதாம்.
அம்மா மோட்டார் சைக்கிள்
பிரிட்ஜ், வாசிங் மெசின் இரண்டும் விலை அதிகம் என்பதால் மொபெட் கொடுக்கலாம் என்று ஜெயலலிதாவிற்கு தோன்றியதாம். முதலில் சைக்கிள் கொடுத்ததுதான் பொதுமக்களிடம் தனக்கு நல்ல பெயரை உருவாக்கியது என்று நினைக்கும் ஜெயலலிதா, அதன் விலை குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொட்டேஷன்கள் வாங்கி வைத்திருக்கிறாராம் ஜெயலலிதா.
அமாவாசை அல்லது அட்சய திரிதியை
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மே 6ம் தேதி வெள்ளிக்கிழமையன்று அமாவாசை நாளில் வெளியாகும் என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திரிதியை நாளான மே 9ம் தேதி திங்கட்கிழமையன்று ஜெயலலிதா வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
மக்களின் மனநிலை மாறும்
அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவரும் பல அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகளால் தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படும் என்பது அதிமுகவினரின் கருத்தாக உள்ளது.