இளையராஜா-எஸ்.பி.பி ராயல்டி விவகாரம் பின்னணியில் இதுவும் ஒரு காரணமா?
40 ஆண்டுகளாக இனிமையான இசைப் பாடல்களை தந்த இளையராஜாவும், எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் நட்பில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு ராயல்டி மட்டும் காரணம் அல்ல.
சென்னை: 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இளையராஜாவும், எஸ்பி பாலசுப்பிரமணியமும் பிரிந்து இருப்பதற்கு காரணம் எஸ்.பி. பாலசுப்பிரணியத்தின் செயல்பாடு என்று கூறப்படுகிறது.
இருவரும் இணைந்து காலத்தால் அழியாத நல்ல இனிமையாக பாடல்களைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தன் பாடல்களை இசைக் கச்சேரிகளில் பாடக் கூடாது என்ற எஸ்பிபி உள்ளிட்டோருக்கு இளையராஜா வச்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
எஸ்பிபி 50
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரிகள் நடத்திவருகிறார். கனடா, ரஷியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு தற்போது அமெரிக்காவில் கச்சேரி நடத்துவதற்காக உள்ளார்.
வக்கீல் நோட்டீஸ்
இந்த நிலையில்தான் அவருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி தனது பாடல்களை மேடைகளில் பாட தடை விதித்து இருக்கிறார். இதை அறிந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக் பக்கத்தில் தாம் இனி இளையராஜாவின் பாடல்களை பாடப் போவது இல்லை என்று தெரிவித்தார்.
பெரிதுப்படுத்த வேண்டாம்
காதும் காதும் வச்சமாதிரி அனுப்பிய வக்கீல் நோட்டீஸை இவராகவே பேஸ்புக்கில் தெரிவித்துவிட்டு தற்போது இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கூறி இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகிறார். இளையராஜாவின் செயல்பாட்டை மேலோட்டமாக பார்த்தோமேயானால் தவறு உள்ளது போல இருக்கும். ஆனால் அதில் உள்ளதை ஆராய்ந்தால் மட்டுமே உண்மை விளங்கும்.
கோடிக்கணக்கில் பணம்
இளையராஜாவின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்கும் சில முன்னணி நிறுவனங்கள் அதில் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். ஆனால் இளையராஜாவுக்கு அதிலிருந்து ராயல்டி செல்வதே இல்லை என்று கூறப்பட்டது.
இதுதான் காரணமா?
கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள 7 நகரங்களி்ல் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எஸ்பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முன்னணி பாடகர்களை இளையராஜா அணுகினார். ஆனால் அதற்கு பெரும் தொகையை எஸ்பிபி கேட்டதாக கூறப்படுகிறது.
எஸ்பிபி செல்லவில்லை
அவர் கேட்ட அந்த தொகையை இளையராஜா அளிக்காததால் எஸ்பிபி அமெரிக்காவுக்கு செல்லவில்லை. பின்னர் வேறு சில பாடகர்களை அழைத்து சென்று இளையராஜா இசைக் கச்சேரி நடத்தினார். இந்த பிரச்னையை மனதில் வைத்து அமெரிக்காவில் எஸ்பிபி இசைக் கச்சேரி நடத்த இருந்த நேரத்தில் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை பாடக் வேண்டாம் என்று எஸ்பிபி, அவரது மகன் சரண், பாடகி சித்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை எஸ்பிபி ஊதி பெரிதாக்கிவிட்டார்.