நேற்று வாடிவாசல்... இன்று நெடுவாசல்... அடுத்த புரட்சியை நோக்கி தமிழகம்
நேற்று வரை ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி வாடிவாசலில் போராடினோம், தற்போது ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தை திரும்பப் பெறக் கோரி நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தில் பெரும் புரட்சிகள் வெடித்து வருகின்றன. தொடர் புரட்சிகளால் மக்கள் நாளை என்ன போராட்டம் நடைபெறுமோ என்று அலசி கொண்டிருக்கின்றனர்.
ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக புகார் கூறிய விலங்குகள் நல அமைப்பான பீட்டா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு சார்பில் வழக்கு தொடுத்தார். மேலும் சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கான தீர்மானத்தையும் நிறைவேற்றினார். ஆயினும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
போராட்டங்கள்
2 ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவின்போது மதுரை அலங்காநல்லூர் மக்களும், சில அரசியல் தலைவர்களும், தமிழ் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தும்.
பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விடும். இந்நிலையில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த வேண்டும் எனக் கோரி மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் ஆதரவு
தமிழர்களின் வீரவிளையாட்டன ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மதுரை மக்களுக்கு ஆதரவளித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைகோத்தனர். இதன் எதிரொலியாக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இளைஞர் சமுதாயம் அணி திரண்டன.
வெளிநாடுவாழ் இந்தியர்கள்
இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். மதுரையிலும் வாடிவாசல் திறக்குவரை வீடுவாசல் செல்லமாட்டோம் என்று பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று திரண்டனர். ஒரு வாரம் நீடித்த போராட்டத்தைத் தொடர்ந்து சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்குப்பட்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கிண்டல் வாசகங்கள்
இது முடிவுக்கு வந்தவுடன் வழக்கம் போல நெட்டிசன்கள் நவம்பர் மாதம் பேங்க் வாசலில், டிசம்பர் மாதம் அப்பல்லோ வாசலில், ஜனவரி மாதம் வாடிவாசலில், அடுத்த மாதம் எங்கோ என்று நையாண்டி செய்திருந்தனர். தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் செய்த நையாண்டி தற்போது உண்மையாகிவிட்டது.
பிப்ரவரியில் நெடுவாசலில்..
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு தலைவலி, தலைசுற்றல், சுவாசக் கோளாறு, சுயநினைவு இழத்தல், இவ்வளவு ஏன் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மனித குலத்துக்கான பேரழிவு
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மனிதகுலத்துக்கு பேரழிவு நிச்சயம் ஏற்படும் என்றும் பின்னர் வருங்காலத்தில் நாமும் அகதிகள் போல் வேறு இடங்களுக்கு புலம்பெயரும் நிலையும் ஏற்படலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. விவசாயம் வீட்டுமனைகளாலும், வறட்சியாலும், மீத்தேன் திட்டத்தாலும் அழியாமல் தடுத்த நமக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்ட முடியாதா என்றும் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை அழிக்கக் கூடாது என்றும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடுத்த போராட்டம்
நெட்டிசன்களின் வார்த்தைக்கேற்ப பிப்ரவரியில் நெடுவாசல் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த போராட்டம் என்னவாக இருக்கும்?. வேறென்ன நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மார்ச் மாதம் போராட்டம் நடைபெறுமா? பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில் மருத்துவ சேர்க்கைகான தேசிய அளவிலான நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
"நீட்" நீட்டிக்கக் கூடாது
தமிழகத்தை பொறுத்தவரை பிளஸ் 2 தேர்வில் மொழிப் பாடம் தவிர்த்து மீதமுள்ள வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் மாணவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கையானது நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகி வருகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த புரட்சியை நோக்கி...
ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகும் என்பதற்காக தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வழக்கு தொடர்ந்துள்ளன. இதை மத்திய அரசு சட்டை செய்யவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு மத்தியில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வர் தங்களுக்கு சாதகமான முடிவை எடுப்பாரா என்று காத்திருக்கின்றனர். ஒருவேளை அவரும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் பட்சத்தில் வாடிவாசல், நெடுவாசலை போல் கோர்ட் வாசலில் மேலும் ஓர் புரட்சி போராட்டம் வெடிக்கலாம்.