ஜிஎஸ்டி: சினிமா டிக்கெட் விலை எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா?
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பின்னர் சினிமா டிக்கெட்டுகளின் விலை ரூ.200 வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட பின்னர் சினிமா தியேட்டர்களில் டிக்கெட்டுகளில் விலை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
ஒரே நாடு ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜிஎஸ்டியில் பொழுது போக்கு கேளிக்கை வரிகள் கணிசமாக உயர்கின்றன. அதிலும் குறிப்பாக சினிமா டிக்கெட்டின் விலை ரூ.50 வரைஅதிகரிக்கும் என்று தெரிகிறது.
ஜிஎஸ்டி வரியின் கீழ் சினிமா தியேட்டர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ரூ. 100க் கீழ் டிக்கெட் வசூலிக்கும் தியேட்டர்களில் 18 சதவீத வரியும், ரூ.100க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் தியேட்டர்களில் 28 சதவீத வரியும் கட்ட வேண்டி வரும்.
50 சதவீதம் வரை உயரும்
புதிய வரி விகித முறைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ரூ. 100க்கு விற்கும் டிக்கெட்டை ரூ.120க்கும், ரூ.120க்கும் விற்கும் டிக்கெட்டை ரூ.150க்கும் உயர்த்தி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலை தான் என்றாலும் தமிழக அரசின் நகராட்சி வரி குறித்து தெளிவாக இன்னும் அறிவிக்கவில்லை.
மாநில அரசின் வரி எவ்வளவு?
இதனால் அரசின் 30 சதவீத நகராட்சி வரியும் சேர்த்து அமல்படுத்தப்பட்டால் டிக்கெட் கட்டணம் ரூ. 200 வரை உயரும் நிலை நிலவுகிறது. இதனால் டிக்கெட் விற்பனையில் 50 சதவீதம் மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாக கிடைக்கிறது.
நஷ்டம் ஏற்படும்
இது போக எஞ்சியிருக்கும் 50 சதவீதத்தைத் தான் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா போல தமிழகமும் நகராட்சி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசுக்கு கோரிக்கை
இதனிடையே பிராந்திய மொழிப்படங்களுக்கு வரி விலக்கு, பிற மொழிப் படங்களுக்கு குறைந்த வரி, வெளிநாட்டு திரைப்படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம் என்று தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு மத்திய அமைச்சருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மால்களில் கொள்ளை
டிக்கெட் கட்டண விலை உயர்வு, பார்க்கிங் கட்டண கொள்ளை, கேண்டீன் கொள்ளை என ஒருநாள் தியேட்டருக்கு குடும்பத்துடன் போனாலே பர்ஸ் பழுத்துவிடும். பலரும் இப்போது ஆப்களில், இணைய தளங்களில் படம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஜிஎஸ்டியால் கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் தியேட்டருக்கு வரும் நடுத்தர, ஏழை மக்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்பது தியேட்டர் உரிமையாளர்களின் அச்சம்.