ஆர்.கே.நகரில் அட்ரஸ் இல்லாமல் முழிக்கும் மதிமுக - தேமுதிக - பாமக.. என்ன செய்யப் போறாங்க!
சென்னை: 2016 சட்டசபைத் தேர்தல் வெள்ளத்தில் அடித்துக் கொண்ட போன கட்சிகள் என்று பட்டியலிட்டால் தேமுதிக, பாமகவை முக்கியமாக குறிப்பிடலாம். இதில் தேமுதிக அழிந்தே போய் விட்டது. பாமக பரிதாபமாக போய் விட்டது. மதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி ஓடியே போய் விட்டது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு மக்களிடமிருந்து ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அப்படியே இவர்கள் போட்டியிட்டாலும் டெபாசிட்டாவது மிஞ்சுமா என்ற அச்சமும் இந்தக் கட்சிகளின் தொண்டர்களிடம் நிலவுவதையும் நம்மால் உணர முடிகிறது.
மக்களால் ஒதுக்கப்பட்ட தலைவர்கள்
மக்களால் அறவே ஒதுக்கப்பட்ட தலைவர்களாக மாறியுள்ளனர் வைகோவும், விஜயகாந்த்தும். இருவருமே ஒரு நேரத்தில் மக்களிடையே பிசியாக வலம் வந்த தலைவர்களாக இருந்தவர்கள். இன்று அப்படி நிலைமை இல்லை.
கெட்ட பெயரைத் தேடிக் கொண்ட வைகோ
வைகோ கடந்த தேர்தலின்போது நடந்து கொண்ட விதம் அவருக்கு மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. திமுக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக அவர் எப்படியெல்லாம் மெனக்கெட்டார் என்பதை யாருமே மறக்கவில்லை. அது மக்களிடையே அவருக்கு கெட்ட பெயரைத்தான் தேடிக் கொடுத்தது.
விஜயகாந்த்
சுய முடிவு எதையும் எடுக்கத் தெரியாதவராக, பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல், அநாகரீகமாகவும், அதிரடியாகவும் நடந்து கொண்டு கெட்ட பெயரைச் சம்பாதித்த இன்னொரு தலைவர் விஜயகாந்த். ஒரே சமயத்தில் அதிமுக, திமுக, பாஜக என அத்தனை பேருடனும் பேச்சுவார்த்தை பேரம் நடத்தி அரசியலில் மிகவும் தரக்குறைவான நிலைக்கு தன்னை இறக்கிக் கொண்டவர் விஜயகாந்த்.
பாமக
மறுபக்கம் பாமக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் அவர்களை மக்கள் இந்த முறையும் ஏற்கவில்லை. ஒரு எம்.எல்.ஏவைக் கூட பெற முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது பாமக. இது அக்கட்சிக்கு நிச்சயம் அதிர்ச்சிதான். தர்மபுரி லோக்சபா தொகுதியில் அன்புமணியை எம்.பியாக ஏற்றுக் கொண்ட மக்கள், அவரது கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவைக் கூட கொடுக்கத் தயாராக இல்லை.
என்ன செய்யப் போகிறார்கள்?
இப்படி மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் வரும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தங்களது கட்சிக்கு எப்படி முகம் கொடுக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. மாறியுள்ள அரசியல் சூழலில் இவர்களுக்கும் மக்களிடையே ஆதரவு கிடைக்குமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இருப்பதை நிரூபிக்க போட்டி அவசியம்
இவர்கள் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, தாங்களும் அரசியல் களத்தில் இருக்கிறோம் என்பதை மக்களிடம் காட்டிக் கொள்வதற்காகவாவது இவர்கள் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பதுதான் இவர்களின் ஆகப் பெரிய கொடும் கஷ்ட சூழ்நிலை ஆகும்.